|
கொழும்புக்கம்பன் கழகத்தின் இவ்வாண்டுக் கம்பன்விழா மே 17,18,19,20 ஆகிய திகதிகளில் (சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய்) கொழும்பு வெள்ளவத்தை ஷ்ரீஇராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலங்கையில் கம்பன்கழகத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டுடன் 28 வருடங்கள் பூர்த்தியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு கம்பன்விழாவின் முதல்நாளான மே 17ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.00 மணிக்கு இராமகிருஷ்ணதோட்டம், இல.11 இல் அமைந்துள்ள ஷ்ரீஐஸ்வர்யலக்ஷ்மி திருக்கோவிலிலிருந்து கம்பன் திருவுருவப்படமும் , சீதா இராம விக்கிரகங்களும் பிரபல நாதஸ்வர, தவில் வித்துவான்களின் இன்னிசையுடனும், கல்லூரி மாணவர்களின் கீழைத்தேய வாத்திய இசையுடனும், மங்கையர்களின் நிறைகுட பவனியுடனும், ஊர்வலமாக விழாமண்டபம் நோக்கி எடுத்து வரப்படும். இவ் ஊர்வலத்தில் இலங்கை, இந்திய, மலேசிய அறிஞர்களும், பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
ஊர்வலத்தைத் தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு அகில இலங்கை இந்துமாமன்றத் தலைவர் வி.கைலாசபிள்ளை தம்பதியர் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைக்க கொழும்புக் கம்பன் கழகத்தலைவரும் இலங்கைக்கான மொறிஷியஸ் நாட்டுப் பிரதிநிதியுமான திரு. தெ.ஈஸ்வரன் தலைமையில் நடைபெறவுள்ள முதல்நாள் விழா நிகழ்ச்சியை கொழும்புக் கம்பன்கழகப் பெருந்தலைவரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசருமான மாண்புமிகு சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் தொடக்கவுரையாற்றி அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார்.
அன்றைய விழாவில், செல்வன் அ.ஆரூரன் அவர்களின் கடவுள் வாழ்த்திசையும், மலேசியநாட்டு கூட்டரசுப் பிராந்திய இணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் அவர்களின் திறப்புரையும் தமிழகத்திலிருந்து வருகை தரும் பிரபல பேச்சாளர் `சொல்வேந்தர்' சுகிசிவம் அவர்களின் `கம்பன் ஏற்றிய கைவிளக்கு' எனும் தலைப்பிலான சிறப்புரையும் நடைபெறவுள்ளன. இவ்வாண்டு கம்பன் விழாவில் தனியுரை, இளைஞர் விவாத அரங்கம், பட்டிமண்டபம், சுழலும் சொற்போர், கவியரங்கம், சிந்தனையரங்கம், வழக்காடு மன்றம், அஞ்சலியரங்கம், ஆன்றோர் கௌரவிப்பு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
விழாவில் மலேசிய அமைச்சர்
இவ்விழாவில் மலேசியக் கம்பன்கழகத்தின் செயலரும், மலேசிய நாட்டு கூட்டரசுப் பிரதேச பிரதியமைச்சருமான டத்தோ எம்.சரவணன் அவர்களின் தலைமையில் ஐந்துபேர் கொண்ட குழுவினர் கலந்து சிறப்பிக்கின்றனர். இவ்வாண்டுக் கம்பன்விழாவின் முதல்நாளில் திறப்புரையை மலேசிய அமைச்சர் அவர்கள் ஆற்றவுள்ளார்.
தமிழ் நாட்டு அறிஞர்கள்
இவ்வாண்டு விழா நிகழ்ச்சிகளிற் கலந்து கொள்ளத் தமிழ்நாட்டின் தலைசிறந்த அறிஞர்களான `சொல்வேந்தர்' சுகிசிவம், `புலவர்' கோ.சாரங்கபாணி, `இலக்கியச்சுடர்' த.இராமலிங்கம், பேராசிரியை பர்வின் சுல்தானா, கவிஞர் நெல்லைஜெயந்தா ஆகியோர் வருகை தருகிறார்கள். இவர்களோடு சென்னைக் கம்பன்கழகம், புதுவைக் கம்பன் கழகம், வேலூர்க் கம்பன் கழகம் ஆகியவற்றின் உறுப்பினர்களான `கம்பகாவலர்' வக்கீல் தி.முருகேசன், `கம்பர்பித்தன்' எஸ்.என்.குப்புசாமி முதலியார், பாவலர்மணி சித்தன் கி.கல்யாணசுந்தரன், உள்ளிட்ட பேராளர்கள் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
நம்நாட்டு அறிஞர்கள், பிரமுகர்கள்
நம்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பிரபல அறிஞர்கள், நிர்வாகிகள், சமுதாயப் பிரமுகர்கள், வர்த்தகப் பெருமக்கள் முதலிய பெரியோர்கள் பலரும் இவ்வாண்டுக் கம்பன் விழாவில் கலந்து கொள்கின்றனர். பேராசிரியர் சி.தில்லைநாதன், முன்னாள் நீதியரசர் எஸ்.ஆனந்தகுமாரசுவாமி, கலாநிதி துரை, மனோகரன், திருமதி வசந்தா வைத்தியநாதன், வி.ஏ.திருஞானசுந்தரம், டாக்டர் எம்.கே.முருகானந்தன் பி.எஸ். சூசைதாசன் , சு.திருஞானசம்பந்தர், கலாநிதி வ.மகேஸ்வரன், இரகுபதி பாலஷ்ரீதரன், அதிபர் பி.கணேசலிங்கம், `கம்பவாரிதி' இ.ஜெயராஜ், தமிழருவி த.சிவகுமார், மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவா, அறங்காவலர்கள் எஸ்.சுப்பிரமணியம் செட்டியார், பொன்.வல்லிபுரம், மு.கந்தவேள், செல்வி மாலா சபாரட்ணம், `தமிழ்த்தென்றல்' அலிஅக்பர், விரிவுரையாளர் ஷ்ரீ.பிரசாந்தன், கவிஞர்கள் இளையதம்பி தயானந்தா, சிதம்பரப்பிள்ளை சிவகுமார், த.சிவசங்கர், த.ஜெயசீலன், எல்.மப்ரூஹ் முதலிய பலரும் இவ்வாண்டு விழாவில் இணைந்து சிறப்பிக்கவுள்ளனர். இவர்கள் தவிர வெளிநாடுகளில் உள்ள நம்நாட்டு அறிஞர்கள் பலரும் இவ்விழாவில் கலந்து சிறப்பிக்கின்றனர்.
`கம்பன்காவலர் விருது' ரி.என்.சேஷகோபாலனுக்கு
வி.ரி.வி.பவுண்டேஷன் நிறுவியுள்ள வி.ரி.வி.தெய்வநாயகம்பிள்ளை நினைவு அறக்கட்டளை வழங்கும் `கம்பன்புகழ் விருது', இவ்வாண்டு இசைத் தமிழின் உயர்ச்சிக்காக தன்னலங்கருதாது சேவையாற்றிவரும் சாதனையாளரான உலகப்புகழ் பெற்ற கர்நாடக இசைமேதை பத்மஷ்ரீ ரி.என். சேஷகோபாலன் அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. கேடயம், பொன்னாடை, ரூபா 50,000 பொற்கிழி ஆகியவற்றுடன் கூடிய இவ்விருதினை, இப்பேரறிஞருக்கு கம்பன்விழாவின் நிறைவு நாளன்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கௌரவ சி.வி.விக்னேஸ்வரன் வழங்கி கௌரவிக்கவுள்ளார்.
கௌரவிக்கப்படும் பெருமக்கள்
தம் செயற்பாடுகளால் நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்த பெருமக்கள் அறுவரை ஆண்டுதோறும் கொழும்புக் கம்பன்கழகம் கௌரவித்து வருகிறது. அவ்வரிசையில் இவ்வாண்டு கௌரவத்துக்குரியவர்களாக அண்மையில் உச்சநீதிமன்ற நீதியரசராகப் பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு வே.ஷ்ரீபவன் அவர்களும், பலகாலம் இந்நாட்டில் தமிழ்ப்பணியாற்றிய பேராசிரியர் திருமதி ஞானாகுலேந்திரன் அவர்களும், கல்வியுலகிற்கும் இலக்கியவுலகிற்கும் பெரும்பணியாற்றிய முற்போக்கு எழுத்தாளர் அ.முகமது சமீம் அவர்களும், கல்வியதிகாரியாய் பலகாலம் பணிபுரிந்து ஓய்வு பெற்ற கல்வியாளர் கலாநிதி குமாரசாமி சோமசுந்தரம் அவர்களும், கலைத்துறையில் தனித்துவமாய்த் தன் பெயர் பதித்த வில்லிசைக் கலைஞர் நா.கணபதிப்பிள்ளை (சின்னமணி) அவர்களும், பலகாலம் பத்திரிகைத்துறையில் பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் ஆ.சிவநேசச்செல்வன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முறையே திரு.பொன்.பாலசுந்தரம் அவர்கள் நிறுவிய கம்பகலாநிதி இரா.இராதாகிருஷ்ணன் ஞாபகார்த்த அறக்கட்டளை விருது தமிழ்நாடு பாரத் பல்கலைக்கழக வேந்தர் எஸ்.ஜெயத்ரட்சகன் நிறுவிய கம்பனடிப்பொடி சா.கணேசன் ஞாபகார்த்த அறக்கட்டளை விருது, கம்பகாவலர் புதுவை ந.கோவிந்தசாமி முதலியார் நிறுவிய கம்பவாணர் அ.அருணகிரி ஞாபகார்த்த அறக்கட்டளை விருது, கம்பன்புகழ் விருதாளர் திருமதி அ.கயிலாயபிள்ளை அவர்கள் நிறுவியுள்ள சுவாமி சாந்தானந்த சரஸ்வதி ஞாபகார்த்த அறக்கட்டளை விருது , திரு.சு.திருஞானசம்பந்தர் நிறுவிய தலைமையாசிரியர் க.சுப்பிரமணியம் ஞாபகார்த்த அறக்கட்டளை விருது, திரு. எஸ்.கணபதிப்பிள்ளை அவர்கள் நிறுவியுள்ள கே. விஜயாலயன் ஞாபகார்த்த அறக்கட்டளை விருது என்பவை வழங்கப்படவுள்ளன. இவர்களுக்கான கௌரவத்தினையும் முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் விழாவின் நிறைவுநாளில் வழங்கவுள்ளார்.
சிறப்பு விருது பெறும் இளைஞர்
இவ்வாண்டு விழாவின் முதல்நாளில் தமிழகப் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் நிறுவியுள்ள ஏற்றமிகு இளைஞர் விருதினை 2007 க.பொ.த.உயர்தரப் பரீட்சையில் தேசியளவில் முதலிடம் பெற்ற மாணவனான செல்வன் எஸ்.மயூரன் கல்வித்துறை சாதனைக்காக இவ்வாண்டு பெறுகிறார்.
மகரந்தச் சிறகு விருது
எமது கழகத்தின் கம்பன்புகழ்விருது பெற்ற உலகக் கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் தனக்குக் கிடைத்த விருதுப் பணத்தைக் கொண்டு ஈழத்துக் கவிஞர்களை ஊக்குவிப்பதற்காக நிறுவிய மகரந்தச்சிறகு விருது இவ்வாண்டு மலையகத்தைச் சேர்ந்த கவிஞர் பிரமிளா பிரதீபன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. சிறப்புப் பரிசாளர்களாக இப்போட்டியில் கலந்து கொண்ட கவிஞர்கள் ரிஸ்வானுல் ஹக், வை.சாரங்கன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கவிஞர் பிரமிளா அவர்களுக்கு மகரந்தச் சிறகு விருதும் ரூபா பதினைந்தாயிரம் பொற்கிழியும் மற்றைய இரண்டு கவிஞர்களுக்கு சான்றிதழும் ரூபா ஐயாயிரம் பொற்கிழியும் முதல்நாள் விழாவில் வழங்கப்படவுள்ளன.
படத்திறப்பும் அஞ்சலியும்
கம்பன் கழகப் பணிகளுக்குத் துணைபுரிந்து அண்மையில் அமரர்களாகிவிட்டவர்களுக்கான அஞ்சலி நிகழ்ச்சி கம்பன் விழாவின் மூன்றாம் நாளன்று நடைபெறவுள்ளது. இவ்வாண்டில் அமரர்களான பண்டிதர். க.சச்சிதானந்தம், எழுத்தாளர் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை, ஆசிரியமணி அ.பஞ்சாட்சரம் ஆகியோரது உருவப்படங்கள் திறந்து வைக்கப்படும். இந்நிகழ்வினை ஐ.நா.சபை முன்னாள் வதிவிடப் பிரதிநிதி திரு.சு.திருஞானசம்பந்தர் அவர்கள் நடத்தி வைப்பார்.
போட்டிகளுக்கான பரிசளிப்பு
அமரர். துரைவிஸ்வநாதன் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட்ட உடன் தலைப்பு வழங்கும் பேச்சு கவிதைப் போட்டிகளில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கான பரிசில்கள் விழாவின் முதல் நாளன்று வழங்கப்படவுள்ளன. இப்போட்டிகளில் பரிசு பெற்றோருக்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு சி.வி.விக்னேஸ்வரன் அவர்களால் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்படும்.
கம்பன் கழகம் வழமைபோல இவ்வாண்டு கம்பன் விழாவிலும் சமுதாயப் பணிக்கான நிதியுதவிகளை வழங்குகிறது. இம்முறையும் மட்டக்களப்பில் இயங்கும் ஆதரவற்ற மாணவர் பராமரிப்பு நிலையமான `யோகர்சுவாமி சைவமகளிர் இல்லத்திற்கும்', விழிப்புலனற்ற மாணவர்களுக்கான சேவை செய்யும் `யாழ் வாழ்வக நிறுவனத்திற்கும்' நிதியுதவிகள் முதல்நாள் விழாவில் வழங்கப்படவுள்ளன.
நூல்வெளியிடு :
கம்பன்விழாவில் ஆண்டு தோறும் கம்பன் சம்பந்தமான நூல் ஒன்றை பூபாலசிங்கம் பதிப்பகத்தாரின் ஆதரவுடன் வெளியிட்டு வரும் கம்பன்கழகம், இவ்வாண்டு `கம்ப உவமைத்திறன்' எனும் கட்டுரைத் தொகுப்பு நூலை விழாவின் முதல் நாளன்று வெளியிடவுள்ளது. அத்தோடு அண்மையில் வானதி பதிப்பகம் வெளியிட்ட கம்பவாரிதி இ.ஜெயராஜ் அவர்களின் `விஸ்வரூபம்' எனும் நூலும், கழகத்தின் வரலாற்றுப் பதிவு நூலான `கம்பனோடு கால்நூற்றாண்டு' பகுதி - 1 எனும் நூலும் வெளியிடப்படவுள்ளன. இந்நூல்களின் முதற்பிரதிகளை முறையே `இலக்கியப்புரவலர்' அல்ஹாஜ் ஹாசிம் உமர் அவர்களும், வீரகேசரி நிர்வாக இயக்குநர் குமார் நடேசன் அவர்களும், தினக்குரல் அதிபர் எஸ்.பி.சாமி அவர்களும் பெற்றுக்கொள்ள உள்ளனர்.
புத்தகக் கண்காட்சி :
ழா நடைபெறும் நான்கு நாட்களிலும் மண்டபவாயிலில் பூபாலசிங்கம் புத்தகசாலை, சேமமடு புத்தகசாலை, மல்லிகைப்பந்தல் வெளியீட்டகம்,ஞானம் வெளியீட்டகம் ஆகிய நிறுவனங்கள் புத்தகக் கண்காட்சி ஒன்றினையும் நடாத்தவுள்ளன. இக் கண்காட்சியில் சிறப்புத் தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படும். தமிழ் இரசிகர்கள் நல்ல தமிழ்நூல்களை விழா மண்டபத்தில் காணவும், பெற்றுக்கொள்ளவும் முடியும். கம்பன் விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நேர ஒழுங்கின்படி நடாத்தப்படவுள்ளதால் இரசிகர்கள் குறித்த நேரத்தில் வருகை தந்து விழாவைச் சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கழக முகவரிப் பட்டியலில் பதிவு செய்யப்பட்டோருக்கு அழைப்பிதழ்கள் நேரடியாக அனுப்பி வைக்கப்படுகின்றன. மற்றைய தமிழ் இரசிகர்களுக்கு ஊடகங்கள் மூலம் விழாவிற்கான அழைப்பினை கம்பன் கழகம் மனமகிழ்வுடன் விடுக்கிறது. இவ்வழைப்பினை மனமுவந்து ஏற்று விழாவுக்கு வருகைதர வேண்டுமென, கொழும்புக் கம்பன்கழகம் அனைவரையும் அன்புடன் வேண்டி நிற்கின்றது. |