-எம்.கே. முருகானந்தன்-
`விசரன், பைத்தியகாரன் போலைதான் என்னை எல்லோரும் பாக்கினம். ஒருதருக்கும் என்ரை பிரச்சனை விளங்குவதில்லை' என்று சொன்னவர் ஒரு இளம் குடும்பஸ்தர். வயது முப்பது இருக்கும். `மனிசி கூட நான் சும்மா சின்ன விடயத்தைத் தூக்கிப் பிடிக்கிறன் எண்டுதான் நினைக்கிறா'.
அவருக்குள்ளது ஒரு தலையிடி. அதுவும் ஒரு பக்கத் தலையிடி. வந்தால் தாங்க முடியாது. தலை வெடிக்குமாப்போலை இருக்குமாம். தலையிடி வரேக்க முதல் சில நேரம் கண் மங்குமாப்போலவும் இருக்குமாம். சத்தி எடுத்தால் சிலவேளை நிண்டு விடுமாம். இது கபாலக் குத்து(Migraine)என்பது உங்களுக்கும் புரிந்திருக்கும்.
`அது பிரச்சினை இல்லை. சமாளிச்சுப் போடலாம். ஆனால், அதோடை கூட மேலிலை ஒரு வலி. அது தான் முக்கியப் பிரச்சனை'. அதைத்தான் மற்றவர்கள் புரிந்து கொள்கிறார்கள் இல்லை என்பதுதான் அவருடைய ஆதங்கம்.
`நின்றால் பயம், நடந்தால் பயம், படுத்தால் பயம்' என்று தெனாலி படத்தில் கமல் பட்ட துன்பமும் ஆனால் அதே நேரத்தில் மற்றவர்களுக்கு அது கேலியாகப்பட்டதும் உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். இவருக்கும் கிட்டத்தட்ட அப்படித்தான். இவரது துன்பமும் மற்றவர்களுக்கு அசட்டுத்தனமாகவும், கேலிக்குரியதாகவும் இருக்கிறது. ஆனால் இவருக்கு உள்ளது பயம் அல்ல, வலி. வலியானது எவருக்கும் வேதனை கொடுக்கும்தானே.அது ஏன் கேலிகுரியதாகிறது என்ற சந்தேகம் உங்களுக்கு எழுகிறதா?
காரணம் இவரது வலி அசாதாரணமானது மற்றவர்களுக்கு வருவது போன்றதல்ல. சொறிந்தால் வலி, சீப்பு போட்டு தலைமுடியைச் சீவினால் அவ்விடத்தில் கடுமையாக வலிக்கும். ஏதாவது யோசித்தபடி நெற்றியைத் தடவினால் அவ்விடத்தில் தாங்க முடியாத வலி ஏற்படும். மணிக்கூடு கட்டிய இடத்தில் வலிக்கும் சேட் போடும் போது துணி தேய்த்த இடமும் வலிக்கும். குழந்தை சந்தோசத்தில் செல்லமாக மூக்கைக் கடித்தால் வலி தாங்காது அழுதே விடுவார்.
ஆனால், மற்றவர்கள் நினைப்பது போல இவரது வலியானது பாசாங்கோ போலியோ அல்ல. அது நிஜமானது. அத்தோடு இது இவருக்கு மட்டுமேயான விசித்திர பிரச்சனையும் இல்லை. இவ்வாறு சிறிய சிறிய விடயங்களுக்கெல்லாம் தோற் பகுதியில் கடுமையான சகிக்க முடியாத வலி ஏற்படுவதை மருத்துவத்தில் அலோடைனியா(Allodynia)என்பார்கள். வலியை உணரும் இவர்களது சருமத்தினது உணர்திறன் அதீதமானது என்பதாலேயே அசட்டை செய்யக் கூடிய சிறு செயல்களும் கடுமையான வலியை உண்டாக்குகின்றன.
அவ்வாறு தோற்பகுதியில் கடுமையான வலி எவருக்குமே ஏற்படக் கூடுமேயாயினும் கபால வலி உள்ளவர்களுக்கு அது வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும் என அல்பேர்ட் ஐன்ஸ்டைன் மருத்துவ கல்லூரியில் (Albert Einstein college of medicine) செய்யப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது. தலையிடியுள்ள 16573 பேர் இவ் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள். அவர்களில் தினமும் தலைவலி வருபவர்களில் 68 சதவீதமானவர்களுக்கும் இடையிடையே தலைவலி வருபவர்களில் 63 சதவீதமானவர்களுக்கும் இத்தகைய தோல் வலி வருவதாகக் கண்டு பிடித்துள்ளார்கள். அதாவது கபாலவலி உள்ளவர்களுக்கு அத்தகைய `அதிவலி உணர்திறன்' வருவதாகக் கூறுகிறார்கள்.
அத்துடன் கபாலவலியுள்ள பெண்களுக்கும்,கபாலவலியுடன் அதீத எடை மற்றும் மனச்சோர்வு நோய் உள்ள ஏனையவர்களுக்கும் இத்தகைய அதீத வலி உணர்வு அதிகம் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். மேலும் இத்தகைய `அதி வலி உணர்திறன்' கொண்ட நோயாளர்களுக்கு சற்று தீவிரமான சிகிச்சை மூலமே தலைவலியையும் உடல்வலியையும் குணப்படுத்த வேண்டும் என்றார்கள்.
விசரன், பைத்தியக்காரன் என மற்றவர்கள் நினைத்த அவருக்கும் அத்தகைய சிகிச்சையே தேவைப்பட்டது.