லெபனான் தலைநகர் பெய்ரூட்டிலிருந்து ஹிஸ்புல்லாஹ் ஆதரவுப் போராளிகள் வாபஸ் பெற்றிருக்கும் நிலையில், மற்றைய நகரான திரிபோலியில் மோதல்கள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இம் மோதல்களில் இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் என்பன அதிகளவில் பயன்படுத்தப்படுவதால் அங்கிருக்கும் மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி வருவதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, கடந்த 4 நாட்களாகத் தொடர்ந்த கடும் மோதல்களின் பின்னர் பெய்ரூட்டிலிருந்து ஹிஸ்புல்லாஹ் போராளிகள் வாபஸ் பெற்றுள்ளனர்.
இம் மோதல்களால் 30 இற்கும் அதிகமானவர்கள் பலியானமை குறிப்பிடத்தக்கது.
தமது குழுவினருக்கெதிரான தீர்மானத்தை அரசு கைவிட்டதைத் தொடர்ந்து பெய்ரூட்டிலிருந்து தமது போராளிகளை வெளியேற்றுவதற்கு ஹிஸ்புல்லாஹ் இணங்கியது.
மேற்குலக ஆதரவுடனான அரசாங்கத்தின் சன்னி பிரிவு போராளிகள் திரிபோலி நகரில் ஹிஸ்புல்லாஹ் ஆதரவு போராளிகளுடன் மோதல்களில் ஈடுபடுவதாக பெயர் குறிப்பிட விரும்பாத பாதுகாப்பு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இங்கிருந்து 7000 இற்கும் அதிகமானோர் வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இம் மோதல்கள் ஆரம்பமாவதற்கு முன்னர் இங்கு இடம்பெற்ற அரசுக்கு சார்பான ஆர்ப்பாட்டங்களின் போது சிரியா சார்பான பாத் கட்சியின் அலுவலகங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
ஹிஸ்புல்லாஹ் அமைப்புக்கெதிரான இரு சர்ச்சைக்குரிய தீர்மானங்களை அரசு கைவிடுவதற்கு இணங்கிய பின்னரே பெய்ரூட்டிலிருந்து இப் போராளிகள் வாபஸ் பெறப்பட்டனர்.
ஹிஸ்புல்லாவின் தொடர்பாடல் வலையமைப்பை மூடுவதற்கும் பெய்ரூட் விமான நிலையத்தில் தலைமைப் பாதுகாப்பு அதிகாரியாக இருக்கும் ஹிஸ்புல்லாஹ் ஆதரவாளரை பதவியிலிருந்து நீக்குவதற்கும் அரசு மேற்கொண்ட தீர்மானங்களே இம் மோதல்களுக்கு காரணமாக அமைந்தன.
பெய்ரூட்டிலிருந்து போராளிகள் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து அங்கு அமைதி திரும்பியுள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் வீதிகளில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.