ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்த மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் முகமாக ஸியா மதகுரு மொஹ்டாடா சத்ருடன் போர் நிறுத்தத்தை மேற்கொள்வதற்கு ஈராக்கிய அரசு இணங்கியுள்ளது.
சத்ர் நகரின் முக்கிய வீதிகளில் நிலை கொண்டிருந்த மொஹ்டாடா சத்ரின் மெஹ்தி இராணுவக் குழு போராளிகள் அங்கிருந்து வெளியேறிக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க மற்றும் ஈராக்கியப் படைகள் ஸியாப் போராளிகளின் ஆயுதங்களை களையும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு நகரான மொசூலில் அல்-ஹைடா மற்றும் அதன் தோழமைப் போராளிகளுக்கெதிரான பாரிய நடவடிக்கையொன்றை ஈராக்கிய படைகள் ஆரம்பித்திருக்கும் நிலையிலேயே இவ் உடன்பாடு அடையப்பட்டுள்ளது.
இப் போர்நிறுத்தம் நேற்று மாலையளவில் அமுலுக்கு வருமென எதிர்பார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்த மோதல்களால் சத்ர் நகரில் சுமார் 2 மில்லியன் மக்கள் பொறிக்குள் சிக்கியிருந்தனர்.
இம் மோதல்களால் இந் நகருக்கான குடிநீர், உணவு மற்றும் மருந்து விநியோகங்கள் என்பன தடைப்பட்டிருந்தன.
இம் மோதல்களில் சுமார் 1000 பேர் கொல்லப்பட்டுள்ள அதேவேளை, இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மெஹ்தி இராணுவக் குழு போராளிகள் தமது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சத்ர் நகர வீதிகளிலிருந்து வெளியேற வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்கப் படைகளையும் சத்ர் நகரை விட்டு வெளியேறுமாறு கோரப்படுமா என்பது இதுவரை தெளிவாகவில்லை.