நுவரெலியா சமர்ஹில் தோட்டத்தைச் சேர்ந்த நான்கு தமிழ் இளைஞர்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார் கைதுசெய்து கொழும்பில் தடுத்து வைத்திருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்ப பயிற்சி பிரதி அமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணனிடம் பெற்றோர் புகார் செய்துள்ளனர்.
ராமசாமி சிவகுமார், வீரநாதன் சுதாகரன், செல்லையா ஜெகதீசன், ரட்ணம் கணகரட்ணம் ஆகிய நான்கு தோட்டப்புறத்து இளைஞர்களே கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கந்தப்பளையில் கைதுசெய்யப்பட்ட ஆறுபேருடன் இந்த நான்கு இளைஞர்களுமாக பத்துப்பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் கந்தப்பளையில் கைதுசெய்து கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவரை பார்க்கச் சென்ற கெங்கா என்ற பெண்மணியும் கடந்த சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அத்துடன் திருமணம் முடித்த அவரது மகனையும் இளைய மகளையும் எதிர்வரும் 10.05.2008 இல் கொழும்பில் விசாரணைக்கு வருமாறு குற்றத்தடுப்புப் பிரிவினர் அழைத்துள்ளதாகவும் பிரதியமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலையக இளைஞர்கள் கைதுகளில் பாரபட்சமும் சில அரசியல்வாதிகளின் தலையீடுகளும் பெரும்சர்ச்சைகளை மலையகப் பகுதியில், குறிப்பாக நுவரெலியா பகுதியில், அமைதியற்ற நிலையை ஏற்படுத்திவருவதாகவும் சில சக்திகள் இதற்கு முயற்சித்து வருவதாகவும் பரவலாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
சகல ஆவணங்களும் வைத்திருந்தபோதிலும் கைது செய்யப்பட்ட நானுஓயா சமர்செட் தோட்டத்தைச் சேர்ந்த கே.திலகவதி, கே.கமலாதேவி ஆகிய இருவரும் வத்தளை பொலிஸாரின் உத்தரவின்பேரில் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவித்ததுடன் அவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுள்ளனர்.
வெலிவேரியா பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கிரேட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தைச் சேர்ந்த ராமன் ராஜேந்திரன், தெகிவளை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட பண்டாரவளையைச் சேர்ந்த கே.யோகேந்திரன், கொகுகலை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட லிந்துலையைச் சேர்ந்த தைரியநாதர் லில்லி ஆகியோரையும் விடுவித்து தருமாறு பெற்றோர் பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் கோரியுள்ளனர்.