* அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு
கல்வியின் மூலமே வாழ்வின் எதிர்காலத்தை நிர்ணயிக்கலாம் என்பதை உணர்ந்தே எனது அரசியல் காலச்சுவட்டில் இன, மத, மொழி கட்சி வேறுபாடின்றி மகிந்தானந்த அபிவிருத்தி நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இது போன்ற செயல்திட்டங்களின் மூலமே நாட்டில் இனப்பாகுபாடின்றி சமாதானத்துடன் வாழ வழி சமைக்கும் என்று மின்சக்தி அமைச்சரும் சிவில் பாதுகாப்பு பொறுப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டி மகிந்தானந்த அபிவிருத்தி நிதியத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்து அவர் மேலும் கூறியதாவது; கிராமம் நகரம், பெருந்தோட்டப் புறங்களைச் சார்ந்த மக்கள் கல்வியில் மேம்பாடடைய வேண்டும்.
அதன் மூலமே தொழில் வாய்ப்புக்கள், அபிவிருத்தி திட்டங்களும் ஏற்பட இடமுண்டு.
மேலும் கொழும்பு, கண்டி போன்ற அபிவிருத்தியடைந்த நகர்ப்புற பாடசாலைகளைப்போல் கிராமங்களும் தோட்டப்புறங்களும் கல்வியில் சிறப்புற வேண்டும் அப்போதே நாடும் சுபிட்சமடையும்.
இன்று சர்வதேச ரீதியில் ஆங்கில மொழி அனைத்து மக்களாலும் கவரப்பட்டும் கணிக்கப்பட்டும் கல்வியில் புலமை பெற்றுவருவதால் நாமும் ஆங்கிலத்தை முக்கிய பாடமாகக்கருதி படிக்க வேண்டும்.
ஆங்கிலத்தின் மூலமே நவீன தொழில் நுட்ப வசதிகளைப்பெறமுடியும். எனவே இந்த நிதியத்தின் மூலம் ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய 3 மொழிகளிலும் கணினி மற்றும் தொழிற்பயிற்சிக்குரிய வாய்ப்புகளும் வழங்கப்படும்.
இதேசமயம் கண்டி ரண்பிம, கொழும்பு ரோயல் போன்ற கல்லூரிகள் கிராமங்களிலும் பெருந்தோட்டப்பகுதிகளிலும் உருவாகவேண்டும். அதற்குரிய ஒத்துழைப்பு உங்களின் மூலமே பெறமுடியும்.
அதன் முதற்கட்டமாக குருந்துவத்தையில் குருந்துவத்தை ராஜகீய பாடசாலை ஒன்று அமைப்பதற்குரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
2009 ஆம் ஆண்டு பூர்த்தியடையும் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் முதல் படிப்படியாக தரமுயர்த்தப்பட்டு கல்விப்பொதுத்தராதர உயர் வகுப்பு வரை நடாத்தப்படும்.
இதேவேளை ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய 3 மொழிகளிலும் பாடங்கள் போதிக்கப்படுவதுடன், பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வாய்ப்பை பெறும் மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும்.
சில பாடசாலைகளுக்கு போக்குவரத்து பிரச்சினை அதிகமாகியுள்ளது. அதைத்தவிர்ப்பது எமது கடமையாகும். ஆரம்பிக்கவிருக்கும் பாடசாலைக்கு நாவலப்பிட்டி - குருந்துவத்தை - கும்பளை கருந்துவத்தை - வாகனவசதிகள் ஏற்படுத்தப்படும்.
அதேவேளை கல்வியில் அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும். எனவே மகிந்தானந்த நிறுவனம் கல்விக்கும் தொழிற்பயிற்சிக்குமே முக்கியத்துவம் வழங்கப்படும் என்றார்.
பெருந்தோட்ட, கிராமப்புற மக்களின் பிள்ளைகளுக்கு 1 வயது முதல் 5 வயது வரையிலான சத்துணவுத் திட்டம் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுவதுடன், 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு உதவி வழங்கும் திட்டமும் உள்ளது.
இவர்களுக்கான நிதி வைப்பு வங்கிகளின் மூலமாக பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் கங்க இகல கோறளை செயலாளர் திருமதி ரஞ்சனி ஜயக்கொடி, செயலாளர் வீரசிங்க, பொருளாளர் சரத் ஆகியோரும் உரையாற்றினர்.
இறுதியாக 100 (நூறு) மாணவர்களுக்கு புலமைப்பரிசில் பத்திரங்கள் வழங்கப்பட்டன.