ஆலி-எலை இலங்கை வங்கிக் கொள்ளை தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டதுடன் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட டொல்பின் வாகனமும் நேற்று முன்தினம் சனிக்கிழமை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஆலி-எலை இலங்கை வங்கிக் கிளையில் கடந்த 24 ஆம் திகதி நண்பகல் வேளையில் மூன்று பேரினால் எட்டரைக் கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள், பணம் ஆகியன கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
இக் கொள்ளை தொடர்பாக இரு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு, கடந்த இரு வாரகாலமாக புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அக்காலப் பகுதியில் 25 பேரிடம் புலனாய்வு விசாரணைகள் நடாத்தப் பட்டன. இதனடிப்படையில் இரு மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தன.
ஊவா மாகாண பிரதி பொலிஸ் அதிபர் எய்ச்.என்.பி. அம்பன் வெலவிற்கு கிடைத்த தகவலொன்றினையடுத்து கடந்த சனிக்கிழமை பதுளைப் பொலிஸாரினால், ஆலி-எலை இலங்கை வங்கிக் கிளை கொள்ளை தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப் பட்டிருப்பதுடன் கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் டொல்பின் வேனும், பொலிஸாரினால் கைப்பற்றப் பட்டிருக்கின்றது.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர், வங்கிக் கொள்ளைகள் பலவற்றிற்கு தேடப்பட்டு வந்தவர்களென்றும், பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.