* ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஷ
பயங்கரவாதத்தை தோற்கடிப்பதனூடாக சமாதானத்தைப் பெற்றுக் கொள்வதற்கான தெளிவான ஆணையை கிழக்கு மக்கள் தேர்தல் மூலம் வழங்கியிருப்பதாக ஐனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபை தேர்தல் நிறைவுபெற்றிருப்பதையடுத்து ஐனாதிபதி நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில், தேர்தல் மூலம் மக்கள் வழங்கியுள்ள ஆணையானது ஜனநாயகத்தை வலுப்படுத்தவும் நாட்டின் அபிவிருத்தியை மேம்படுத்தவும் உதவுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் ஜனநாயகத்தை நிலைநாட்டி இயல்பு நிலையை தோற்றுவிக்க வேண்டுமென்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு கிடைத்த மக்களின் அங்கீகாரமாகும்.
கடந்த மார்ச்சில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலை தொடர்ந்து தற்போது கிழக்கில் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கும் தேர்தலானது புலிகளின் ஆதிக்கத்திலிருந்த பகுதிகளில் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீள நிலைநாட்ட வேண்டுமென்ற அரசின் கொள்கையின் முக்கியமான மைல்கல்லாகும்.
அமைதியான முறையில் கிழக்கு மாகாண வாக்காளர்கள் வாக்களிப்பில் பங்கேற்றுள்ளனர். தமது ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டுமென்ற விருப்பத்தை பெருமளவானோர் வெளிப்படுத்தியுள்ளனர். பயங்கரவாதத்தின் பிடியினால் அவர்களின் இந்த உரிமைகள் இரு தசாப்த காலமாக முடுக்கப்பட்டிருந்தன.
தேர்தலில் பங்குபற்றிய சகல அரசியல் கட்சிகள், தேர்தல் திணைக்கள அதிகாரிகள், ஏனைய அரச அதிகாரிகள், ஆயுதப்படையினர், பொலிஸார் ஆகியோருக்கு தேர்தலை வெற்றிகரமாக நடத்த உதவியதற்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.