பிரிட்டனில் புலிகள் இயக்கத்தின் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் தலைவர் எனவும் பிரபாகரனின் லண்டன் பிரதிநிதி எனவும் கருதப்படும் ஏ.சி.சாந்தன் அல்லது அருணாசலம் கிரிஷாந்தகுமார் எனப்படும் பிரமுகர் கடந்த 6 ஆம் திகதி பிரிட்டிஷ் பொலிஸ்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். லண்டனில் புலிகள் இயக்கத்தின் தலைவர் எனப் பொதுவாக அறியப்பட்ட இவரைக் கடந்த 2007 ஆம் ஆண்டிலும் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தொடர்புக் குற்றச்சாட்டின் பேரில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். ஆயினும், பின்னர் நீதிமன்றம் எச்சரிக்கை அடிப்படையில் பிணையில் விடுவித்திருந்தது.
இவ்வாறு கடந்த 6 ஆம் திகதி சாந்தன் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்ட வேளையில், அவர் லண்டனுக்கு வடமேற்கில் விலற்செயர் பிரதேசத்தில் ஸ்வின்டன் என்னும் நகரிலுள்ள அவருடைய வீட்டில் தங்கியிருந்துள்ளார். சம்பவதினம் மேற்படி பொலிஸ் பிரிவினர் விற்செயர் பொலிஸ் பிரிவினருடன் இணைந்து அவருடைய வீட்டைச் சுற்றி வளைத்து சாந்தனைக் கைது செய்துள்ளனர்.
முன்னைய தடவை சாந்தன் கைது செய்யப்பட்டது கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் திகதியாகும். பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக யுத்த ஆயுதங்கள் உபகரணங்கள் கொள்வனவு, பயங்கரவாத செயற்பாடுகளுக்காக நிதி சேகரிப்பு, பல்வேறு பங்கரவாத திட்டமிடல்கள், பிரிட்டனில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகிய புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக ஊர்வலங்கள், கூட்டங்கள், விழாக்களை ஏற்பாடு செய்தமை போன்ற பல்வேறு பயங்கரவாதத் தொடர்புக் குற்றச்சாட்டுகளின் பேரில் மேற்படி சாந்தனைக் கைது செய்த லண்டன் பொலிஸார் பின்னர் அவரை 2007 நவம்பர் 27 ஆம் திகதி கிங்ஸ்ரன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்திருந்தனர். எவ்வாறாயினும் சாந்தன் அந்த வழக்கிலிருந்து பிணையில் விடுதலையாகிவிட்டார்.
அதன் பின்னர் சாந்தன் புலிகள் இயக்கத்தின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக இரகசியமான முறையில் செயற்பட்டு வந்தார் எனவும் இதனால் லண்டனில் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாக நடத்தப்பட்ட எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் அவர் பகிரங்கமாகத் தோன்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர் லண்டன் நகரை விட்டு வெளியேறி ஸ்வின்டன் பிரதேசத்தில் வசித்து வந்தார் எனவும் இதன்மூலம் லண்டனில் பயங்கரவாதத் தொடர்பு குற்றச்சாட்டின் பெயரில் மீண்டும் கைது செய்யப்படுவதைச் சாந்தன் தவிர்த்து வந்துள்ளார். இதற்குக் காரணம், மீண்டும் அவர் கைது செய்யப்படும் பட்சத்தில் அவர் நீதிமன்றத் தண்டனையிலிருந்து தப்பமுடியாது என்பதாலேயே.
ஆனால், கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி பிரிட்டிஷ் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் பிரிவினர் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் மூவரை லண்டனில் வைத்துக் கைது செய்ததைத் தொடர்ந்து அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளிலிருந்து சாந்தன் சம்பந்தப்பட்ட பயங்கரவாதச் செயற்பாடுகள் பற்றிய தகவல்களை பொலிஸார் பெற்றுக் கொண்டதாகக் கருதப்படுகிறது. இதன்பின்னர் அந்த மூன்று புலிகள் இயக்க நபர்களையும் கைது செய்த லண்டன் படிங்ரன் பொலிஸார் அவர்களைத் தொடர்ந்தும் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எவ்வாறாயினும் சாந்தன் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் பிரிவால் கைது செய்யப்பட்டதற்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை. எவ்வாறாயினும் முதற்றடவை கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்னரும் சாந்தன் பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
மேற்படி பிரபாகரனின் லண்டன் பிரதிநிதி சாந்தன் அல்லது அருணாசலம் கிரிஷாந்தகுமார் காலம் சென்ற புலிகள் இயக்கத்தின் பேச்சாளரும் ஆலோசகருமான அன்ரன் பாலசிங்கத்துடன் மிக நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தவர் ஆவார். தற்போது இவரிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவரும் பயங்கரவாதத் தடுப்பு பொலிஸ் பிரிவு, தொடர்ந்து அவரை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
லங்காதீப:08/05/2008