* விசாரணை ஆணையாளர் கூறுகிறார்
ஸ்ரீசாந்தை ஹர்பஜன்சிங் அறைந்த விவகாரத்தில் யாருக்கும் தண்டனை வழங்கும்படி அறிக்கையில் பரிந்துரை செய்யவில்லையென ஆணையாளர் நானாவதி கூறியிருக்கிறார்.
ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியின் போது ஷ்ரீசாந்தை ஹர்பஜன்சிங் கன்னத்தில் அறைந்த பிரச்சினை குறித்து விசாரிக்க வக்கீல் சுதிர் நானாவதியை இந்திய கிரிக்கெட் சபை நியமித்தது. 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அவருக்கு உத்தரவிட்டது. இதன்படி விசாரணை நடத்திய அவர் தனது விசாரணையை முடித்து அறிக்கையைத் தயார் செய்து விட்டார்.
முதலில் அறிக்கையை இன்று தாக்கல் செய்யவிருப்பதாக கூறியிருந்த அவர் இப்போது ஒரு நாள் தள்ளி நாளை செவ்வாய்க்கிழமை சமர்ப்பிக்கவுள்ளார். அன்று தான் கிரிக்கெட் சபை விதித்த 15 நாள் கெடுவின் கடைசி நாள் ஆகும்.
இதுபற்றி ஆணையாளர் சுதிர் நானாவதி ஆமதாபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது;
விசாரணை அறிக்கையை 12 ஆம் திகதி (இன்று) இந்திய கிரிக்கெட் சபைத் தலைவர் சரத்பவாரிடம் சமர்ப்பிக்கத் திட்டமிட்டிருந்தேன். ஆனால், அன்றைய தினம் சில வழக்குகள் தொடர்பாக குஜராத் நீதிமன்றில் ஆஜராக வேண்டியுள்ளது. எனவே, எனது விசாரணை அறிக்கையை மும்பையில் இந்திய கிரிக்கெட் சபை நிர்வாகிகளிடம் 13 ஆம் திகதி தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளேன் .
அறிக்கையில் வீரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை குறித்து நான் எதுவும் பரிந்துரைக்கப் போவதில்லை.
ஏனெனில் நான் இந்தச் சம்பவம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் சபையால் நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி மட்டும் தான். ஹர்பஜன்சிங், ஷ்ரீசாந்த் இடையே ஏற்பட்ட பிரச்சினைக்கான காரணத்தை மட்டுமே எனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறேன்.
இந்தச் சம்பவத்தில் குற்றம் நிரூபணமானால் வீரர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று கேள்விக்கு பதிலளித்த நானாவதி வீரர்கள் மீதான குற்றப்பிரிவு 4 இன் கீழ் வருவதால் அவர்களுக்கு ஏராளமான போட்டிகளில் தடை விதிக்கலாம் . அதிகபட்சமாக ஆயுட்கால தடை விதிக்கவும் முடியும். இதே போன்ற பிரிவு 4 இன் கீழ்வரும் குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் கப்டன் அசாருதீன் , அஜய் ஜடேஜா ஆகியோருக்கு ஏற்கனவே ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்றார்.
நானவதி சமர்ப்பிக்கும் அறிக்கை இந்திய கிரிக்கெட் சபை ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்தக்குழு என்ன தண்டனை என்பதை அறிவிக்குமென்றார்.