இந்தியக் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் மீது அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கி பொன்டிங் தாக்குதலை தொடுத்திருக்கிறார்.
ஐ.பி.எல். ஆட்டத்தின் போது ஹர்பஜன்சிங் ஷ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்தது குறித்து பொன்டிங் அவுஸ்திரேலியப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது;
ஹர்பஜன்சிங் மீண்டும் ஒரு தவறை செய்திருக்கின்றார். சொந்த அணி வீரரை தாக்கியதன் மூலம் ஹர்பஜன்சிங்கின் முகமூடி கிழிந்து விட்டது. அதுவும் அவருடன் சுமார் 20 டெஸ்ட் போட்டிகள் இணைந்து ஆடியவரிடம் இப்படி நடந்து கொண்டிருக்கின்றார். இந்தச் சம்பவத்தின் மூலம் மக்கள் ஹர்பஜன்சிங் பற்றி சொந்தமாக ஒரு முடிவு செய்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன்.
மூன்று மாதங்களுக்கு முன் சிட்னியில் நடந்த டெஸ்டின் போது சைமண்சை இன வெறியுடன் திட்டியதாக எழுந்த பிரச்சினையில் ஹர்பஜன்சிங்குக்கு முதல் 3 டெஸ்டில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. பின் அது நீக்கப்பட்டு போட்டிக் கட்டணத்திலிருந்து 50 சதவீதம் அபராதத்துடன் விட்டு விட்டார்கள்.
நாங்கள் எதிர்பார்த்த தீர்ப்பு அதுவல்ல. அப்படிப் பார்த்தால் நான்கூட ஒரு நாள் போட்டிகளின் போது குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசி முடிக்காததற்காக 20 முதல் 30 சதவீதத்தை போட்டிக் கட்டணத்திலிருந்து அபராதமாக கொடுத்திருக்கின்றேன் என்றார்.