முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு நிறுவன பெண் ஊழியருக்கும், விமானத்தில் கைக்குழந்தையுடன் யாழ்ப்பாணம் புறப்படவிருந்த ஒரு பெண்ணுக்கும் ஏற்பட்ட அவலத்தை ஓர் அன்பர் தெரிவித்தார்.
நேரம் பிந்திவிட்டதால் இளம் பெண் ஊழியர் முச்சக்கரவண்டியொன்றில் ஏறி அலுவகத்துக்கு முன்பாக வந்திறங்கினார்.
கீழே நின்றுகொண்டு 500 ரூபா தாளை நீட்டியபோது, முச்சக்கரவண்டிச் சாரதி, இதை மாற்றுவதற்குப் பணமில்லை என்று சொல்லிக்கொண்டே திடீரென வண்டியைச் செலுத்தி தலைமறைவாகிவிட்டாராம்.
யாழ்ப்பாணம் புறப்படுவதற்குத் தயாராக கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி தனது கைப்பையை மறந்தே போய்விட்டார். விமான நிலையத்துக்குச் செல்வதற்கான பஸ் வந்ததும் கைப்பையை தேடினார். ரொக்கப் பணமும் நகைகளும் இருந்த அந்த கைப்பையை காணோம்.
இவரின் ஓலத்தை பார்த்த ஏனைய பயணிகள், தங்களுக்குள் ஓரளவு பணம் திரட்டி அப்பெண்ணிடம் கொடுத்தனராம்.
பயணிகள் எப்போதும் முன்னெச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இச்சம்பவங்களை இங்கு குறிப்பிடுகிறேன். நாம் விழிப்பாக இருக்கவேண்டாமா !