மலேசியாவிலுள்ள இந்திய வம்சாவளியினர் நேற்று முன்தினம் மீண்டும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் இந்து உரிமை நடவடிக்கை இயக்கத் தலைவர் பி. உதயகுமாரை விடுதலை செய்யக் கோரி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்தியர்களுக்கு சம உரிமை கோரி கோலாலம்பூரில் கடந்த நவம்பர் 25 ஆம் திகதி நடைபெற்ற போராட்டத்தை அடுத்து உதயகுமார் உட்பட இந்திய வம்சாவளியினர் 5 பேர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சிறையில் உள்ள உதயகுமாருக்கு இதயக் கோளாறு ஏற்பட்டுள்ளது. எனவே, அவருக்கு கோலாலம்பூரில் உள்ள தேசிய இதயச் சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பது அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இத்தகவலை இந்து உரிமை நடவடிக்கை இயக்கத் தலைவர் வைத்தியமூர்த்தியின் மனைவி ஈஸ்வரி தெரிவித்தார். இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள உதயகுமாருக்கு சிகிச்சை அளிக்கக் கோரி மலேசியாவில் பல்வேறு இடங்களில் இந்திய வம்சாவளியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உதயகுமாரின் நிலைமை மிகவும் மோசமாகி வருவதாக இந்து இயக்கத் தலைவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்யுமாறு உதயகுமாரின் தாய் பிரதமர் படாவியைச் சந்தித்து மனுகொடுக்க உள்ளார். அன்னையர் தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. இதைச் சுட்டிக்காட்டி மகனை விடுதலை செய்ய அவர் கோரியுள்ளார்.