வவுனியாவுக்கும் மதவாச்சிக்கும் இடையிலான இணைப்பு ரயில் சேவைகள் அடுத்த வாரம் முதல் நடத்தப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என ஈ.பி.டி.பி. வவுனியா மாவட்டப் பொறுப்பாளர் சிவன் சிவகுமார் தெரிவித்தார்.
வவுனியாவுக்கான ரயில் சேவைகள் தற்போது மதவாச்சி வரையும் நடைபெற்றுவருவதால் வவுனியா பயணிகள் மதவாச்சியில் இருந்து வவுனியாவுக்கும், வவுனியாவில் இருந்து கொழும்பு செல்லும் பயணிகள் மதவாச்சிக்கும் செல்ல வசதியாக இச்சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.
வவுனியா - கொழும்பு ரயில் சேவைகள் மதவாச்சி வரையும் நிறுத்தப்பட்டுள்ளதால் வடபகுதி பயணிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து வடமாகாண செயலாணிக் குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பாதுகாப்பு அமைச்சசின் செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளை அடுத்து இந்த இணைப்பு ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி கொழும்பு கோட்டையில் இருந்து மதவாச்சிக்கு வருகின்ற மூன்று ரயில்களிலும் பயணம் செய்யும் வடபகுதி பயணிகள் மதவாச்சி ரயில் நிலையத்தில் இருந்து வவுனியாவுக்கான இணைப்பு ரயில்களில் பயணம் செய்யலாம்.
இதேபோல வவுனியாவில் இருந்து கொழும்பு மற்றும் தென்பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் மதவாச்சி ரயில் நிலையத்துக்கு வந்து மதவாச்சியில் இருந்து புறப்படும் ரயில்களில் பயணம் செய்யக் கூடியவாறு இணைப்பு ரயில் சேவைகள் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறு வவுனியாவுக்கும் மதவாச்சிக்கும் இடையில் மூன்று இணைப்பு சேவைகள் நடைபெறவுள்ளன.