ஐ.பி.எல். தொடரில் வோர்ன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. நேற்று முன்தினம் ஜெய்ப்பூரில் நடந்த பரபரப்பான லீக் போட்டியில் வட்சன் தூள் கிளப்ப, சேவாக்கின் டில்லி டேர்டெவில்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற வோர்ன் முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.
வழக்கத்துக்கு மாறாக மந்தமாக ஆடிய சேவாக் 17 ஓட்டங்களுக்கு (20 பந்தில்) வட்சன் பந்தில் வீழ்ந்தார். அருமையான போர்மிலிருக்கும் காம்பிர் மட்டும் பவுண்டரிகளாக விளாசி நம்பிக்கையளித்தார். இவர் திரிவேதி பந்தில் 31 ஓட்டங்களுக்கு போல்டாக சிக்கல் ஏற்பட்டது.
இந்த நேரத்தில் 14 வது ஓவரை வீசிய மஸ்கரனாஸ் கலக்கினார். டிவிலியர்ஸ்(20), தினேஸ் கார்த்திக்கை (13) ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர் திலகரட்ன டில்ஷான், மக்ரூப் இணைந்து அதிரடியாக விளையாடி கைகொடுத்தனர். வோர்ன் வீசிய 19 ஆவது ஓவரில் மக்ரூப் நான்கு சிக்சர்கள் விளாச.... மொத்தமாக 27 ஓட்டங்கள் கிடைத்தது. மக்ரூப் 16 பந்துகளில் 39 ஓட்டங்கள் (4 சிக்சர், 2 பவுண்டரி) விளாசினார். டில்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்கள் எடுத்தது.
இலகுவான இலக்கை சேஸ் செய்த ராஜஸ்தான் அணி தொடக்கத்தில் திணறியது. மெக்ராத் மிகவும் கஞ்சத்தனமாக பந்து வீசினார். முதல் 3 ஓவரில் 6 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்தார். கடந்த போட்டியில் கலக்கிய யூசுப் பதான் (8) இம்முறை பரிதாபமாக ரன் அவுட்டானார். சிறிது நேரத்தில் சேவாக்கின் துல்லிய `த்ரோவில்' கைப் (1) ஓட்டம் எடுத்து அவுட்டாக, நெருக்கடி ஏற்பட்டது. இதற்குப்பின் ஸ்மித், வட்சன் இணைந்து அசத்தலாக ஆடினர். மகேஷ் வீசிய 7 வது ஓவரில் வட்சன் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். ஸ்மித் 24 ஓட்டங்களுக்கு வெளியேறினார்.
ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் மறுபக்கம் தனது அதிரடியை தொடர்ந்தார் வட்சன். ஆட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்ட இவர் மிஷ்ரா வீசிய 15 ஆவது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். சேவாக் வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்சர் அடித்தார். இவர் சர்ச்சைக்குரிய முறையில் 74 ஓட்டங்களுக்கு (5 பவுண்டரி, 5 சிக்சர்)ரன் அவுட்டானார்.
கடைசி ஓவரில் 1 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. மகேஷ் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் ராவத் பவுண்டரி அடிக்க, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 19.1 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்கள் எடுத்து இன்னொரு சிறப்பான வெற்றியை பெற்றது. ஆட்ட நாயகனாக வட்சன் தேர்வு செய்யப்பட்டார்.
மக்ரூப் வீசிய 19 ஆவது ஓவர் பரபரப்பு ஏற்படுத்தியது. முதல் பந்தில் வோர்ன் ஆட்டமிழந்தார். இரண்டாவது பந்தில் ஒரு ஓட்டத்திற்காக ஓட முற்பட்டார் வட்சன். அதற்குள் பந்தை பெற்ற விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் விக்கெட்டை தகர்த்தார். ஆனால் நடுவர் ஸ்ரீவ் டேவிஸ் `அவுட்' கொடுக்க மறுத்தார்.
`ரீபிளேயில்' வட்சன் அவுட் என்பது தெளிவாக தெரிந்தது. உடனே இன்னொரு நடுவர் ரூடி கோஜர்ட்சனிடம் டில்லி கப்டன் சேவாக் புகார் கூற, மூன்றாவது நடுவரிடம் கேட்கப்பட்டது. இதில் வட்சனுக்கு ரன் அவுட் கொடுக்கப்பட்டது.
இதற்கு முன் சிமித் `கட்ச்' தொடர்பாக கங்குலி சர்ச்சை கிளப்பினார். தற்போது சேவாக்கும் களத்திலிருக்கும் நடுவரை மூன்றாவது நடுவரிடம் கேட்கும்படி நிர்ப்பந்தித்துள்ளார். இதனால் மீண்டும் ஒரு சர்ச்சை வெடிக்கலாம்.