வடக்கு மக்களுக்கான சிறப்பு நிர்வாகத்தின் தேச வாழ்வியல் உரிமைகளுக்கான பணியின் கீழ் யாழ்.மாவட்டத்திற்கான அபிவிருத்தி மற்றும் செயற்றிட்டங்களை முன்னெடுப்பதற்கான விசேட கூட்டம் ஒன்று அதன் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றுள்ளது. கடந்த 8ஆம் திகதி நிகழ்ந்த இந்த விஷேட கூட்டத்தில் அமைச்சுகள் சார்ந்த செயலாளர்கள் மற்றும் அரச உயரதிகாரிகள், யாழ். அரசாங்க அதிபர் ஆகியோர் கலந்து கொண்டதுடன், மாவட்ட அபிவிருத்தி மற்றும் மக்கள் நலப்பணிகள் குறித்த பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டு, அதற்குரிய தீர்மானங்களும் நிதி ஒதுக்கீடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிர்வாகத்திலுள்ள நாவற்குழி மாதிரி வீடமைப்புத் திட்டமானது, அது அமைந்துள்ள காணியுடனும் 168 வீடுகளுடனும் யாழ்.அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
யாழ். மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் மற்றும் போர் அனர்த்தங்களால் இடம்பெயர்ந்த மக்களே இவ்வீடமைப்புத் திட்டத்தில் வசித்து வருவது பிரதான விடயமாகும். தேச நிர்மாண மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சானது நாவற்குழி வீடமைப்புத் திட்ட அபிவிருத்திக்கு 10 கோடியே 5 இலட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாவினை வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.
மற்றும் நாவற்குழி வீடமைப்பு திட்டத்தில் வாழும் 168 குடியிருப்புகளுக்கும் சுயதொழில் ஊக்குவிப்பு திட்டத்திற்காக தலா 30 ஆயிரம் ரூபா வீதம் 50 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா செலவிடவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, ஒதுக்கப்பட்டிருக்கும் 10 கோடியே 5 இலட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபா நிதியின் மூலம் நாவற்குழி மாதிரிக் கிராமத்தில் கூட்டுறவுக் கிளை, உப தபால் நிலையம், சுகாதார நிலையம், முன்பள்ளி, சன சமூக நிலையம், பொது மண்டபம், மாதர் சங்க கட்டிடம், விளையாட்டு மைதானம் மற்றும் மத வழிபாட்டுத் தலங்கள் என்பன அமைக்கப்படுவதற்கான தீர்மானங்களும் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டிருந்தது. நாவற்குழி வீடமைப்பு திட்டத்தை மீள இயங்க வைப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்து அதற்கான அங்கீகாரத்தினையும் செயலாளர் நாயகமும் அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா புனர்வாழ்வு அமைச்சராக இருந்த போது வழங்கப்பட்ட வேலை வாயப்புகளில் இதுவரை நிரந்தர நியமனங்கள் பெறப்படாமல் இருக்கும் நிலைமைகள் குறித்து விஷேடமாக இக்கூட்டத்தில் ஆராயப்பட்டது. இது குறித்து நிரந்தர நியமனங்கள் வழங்கப்படுவதற்கான அமைச்சரவை பத்திரத்தினை அமைச்சரவை அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்திருந்தார்.
இக்கூட்டத்தின் போது கருத்து தெரிவித்திருந்த தேச நிர்மாண மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.கே.கே.குமாரசிறி, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இதற்கான அமைச்சரவை அங்கீகாரத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்திருந்தார். இதன் பிரகாரம் மேற்குறிப்பிட்டதுபோல் இதுவரை நிரந்தர நியமனம் பெறப்படாதவர்களுக்கு விரைவில் நிரந்தர நியமனங்களை வழங்குவதற்கான தீர்மானமும் இக்கூட்டத்தின்போது இயற்றப்பட்டிருந்தது.
யாழ்.மாவட்ட அபிவிருத்திக்கென மகிந்த சிந்தனையின் கீழ் 11 கோடி ரூபாவினைச் செலவிடவும் இக்கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டுள்ளமை முக்கிய விடயமாகும். அத்துடன், தேசிய எழுச்சித் திட்டத்திற்கு 9 கோடி ரூபாவினை வழங்குவதுடன், தேச நிர்மாண மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினூடாக கிராம எழுச்சித் திட்டத்திற்கு 18 கோடி ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இத்திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக முன்னெடுக்கப்படும்போது இதன் முன்னேற்றத்தினைத் தொடர்ந்து மிகுதி நிதியான 27 கோடி ரூபாவினை மேலும் வழங்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்ட சமுர்த்தி விடயங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளதுடன், வெற்றிடமாக உள்ள 46 சமுர்த்தி முகாமையாளர் வெற்றிடங்களையும் 308 சமுர்த்தி உத்தியோகத்தர் வெற்றிடங்களை நிரப்பவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
அத்துடன், சமுர்த்தி நிவாரணமாக உணவு முத்திரை பெறுவோர் குறித்து மாறி வரும் விலைவாசி அதிகரிப்பினை கருத்திற்கொண்டு சமுர்த்தி நிவாரணம் பெறுவோருக்கு தகுந்த முறையில் நிவாரணம் வழங்கல் முறையினை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை வழங்கியதோடு, அதை தொடர்ந்து சிறப்பாக நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
மகிந்த சிந்தனையின் அடிப்படையில் கோப்பாய் மற்றும் சாவகச்சேரி பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட மக்களுக்கு இரட்டிப்பு நிவாரணங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகின்ற நிலையில், யாழ். மாவட்டத்தில் எஞ்சியுள்ள ஏனைய 13 பிரதேச செயலகங்களுக்கு உட்பட்டு வாழும் மக்களுக்கும் இரட்டிப்பு மடங்கான சமுர்த்தி நிவாரணங்களை வழங்குவதற்கான தீர்மானம் இயற்றப்பட்டிருந்தது.
இதற்கான நிதிப் பற்றாக்குறை ஏற்படும் நிலையில் பாராளுமன்றத்தில் அதற்கான குறை நிரப்பு பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்குமாறு தேச நிர்மாண, மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இக்கூட்டத்தின் போது பணிப்புரை வழங்கினார்.
யாழ்.மாவட்டத்திற்கு தேவையான உணவுப் பொருட்களின் கையிருப்பினை குறைந்தது 3 மாத காலப்பகுதிக்கு தேவையான அளவில் தொடர்ந்து பேணி வருவதற்கான திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தின்போது ஆராயப்பட்டு உரிய தீர்மானமும் எடுக்கப்பட்டது.
உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியிடம் இதற்கான கோரிக்கையினை விடுக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேச நிர்மாண அமைச்சு, மற்றும் மீள் குடியேற்ற, அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களுக்கு பணிப்புரையினை வழங்கியிருந்தார்.
இதேவேளை, உணவுக் கையிருப்பு குறித்து அதிக கவனம் செலுத்தி, இதை உறுதிப்படுத்துவதோடு, வேண்டிய விடயங்களை தன்னுடன் தொடர்புகொண்டு பேச வேண்டும் என யாழ்.அரச அதிபர் கே.கணேஷுக்கு எடுத்து விளக்கியிருந்தார்.
வடக்கு மக்களுக்கான சிறப்பு நிர்வாகத்தின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சமூகசேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சு பணிமனையில் இடம்பெற்ற இவ்விஷேட கூட்டத்தில் அமைச்சின் செயலாளர் திருமதி வீ.ஜெகராஜசிங்கம், தேச நிர்மாண மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யு.கே.கே.குமாரசிறி, மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஏ.சி.எம்.ராசீக், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சின் செயலாளர் டபிள்யூ.பி.கணேகல, அனர்த்த முகாமைத்துவ வீடமைப்பு பொதுவசதிகள் அமைச்சின் மேலதிக செயலாளர் யு.என்.றொட்றிகோ, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பொது முகாமையாளர் கே.கெட்டபேராட்சி, தேச நிர்மாண மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் பிரதான கணக்காளர் திருமதி எஸ்.ஏ.கே.ஆரியரட்ண, தேச நிர்மாண அமைச்சின் கணக்காளர் கே.நவரட்ணம் ஆகியோருடன் யாழ்.அரசாங்க அதிபர் கே.கணேஷ் ஆகியோர் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.