தென்பிராந்திய ஊடகவியலாளர்கள் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்திருப்பது சமாதானத்திற்கான இணைப்புப் பாலமாக விளங்குகிறது. மூன்று தசாப்தகால யுத்த சோகங்களையும், ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்படுத்திய பாதிப்புக்களையும் நேரில் கண்டிருக்கிறீர்கள். இதன் மனப்பதிவுகளை செய்திகளாக வெளியிட்டு உதவுவது ஊடகவியலாளர்களாகிய உங்கள் தார்மீகப் பொறுப்பாகும்
இவ்வாறு கூறினார் பிராந்திய செய்தியாளர் எஸ். சிராஜுதீன். கடந்த 7 ஆம் திகதி புதன்கிழமை இன்ரநியூஸ் நெட்வேர்க் கிழக்கு ஊடகஇல்லத்தினால் ஏற்பாடு செய்து சாய்ந்தமருது பரடைஸ் ஹோட்டலில் இடம் பெற்ற நட்புறவு மதிய போசன நிகழ்வில் ஊடகவியலாளர் சார்பில் உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார்.
கிழக்கு ஊடக இல்லப் பணிப்பாளர், ஐ.எம். சதாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் அம்பாறை மாவட்ட, தென்மாகாண ஊடகவியலாளர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.
அவர்மேலும் தெரிவித்ததாவது; தென்மாகாண ஊடகவியலாளர்கள் கிழக்கு மாகாணத்திற்கு வருகைதர வேண்டுமெனும் நீண்ட நாள் கனவை இன்ர நியூஸ் கிழக்கு ஊடக இல்லம் நிறைவேற்றியமை குறித்து எங்களது இதயம் கனிந்த பாராட்டுகளை இங்கு தெரிவிக்க விரும்புகிறோம்.
சமாதானத்தைத் ஏற்படுத்துவதில் ஊடகவியலாளர்கள் அளப்பரிய சேவை ஆற்றுகின்றனர். மதத்தால், மொழியால் வேறுபட்டிருந்தும் மனிதம் எனும் உணர்வால் நாம் ஒன்றுபட்டுள்ளமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இந்நிலைல்தொடர இன்ர நியூஸ் நிறுவனம் பங்களிப்புச் செய்வதோடு மீண்டும் ஒன்று கூடல்களை ஏற்படுத்த வேண்டும்.
மூன்று தசாப்தகால யுத்தம், ஆழிப்பேரலை அனர்த்தம் ஆகியவற்றினால் பல இன்னல்கள் மத்தியில் ஊடகவியலாளர்கள் சேவையாற்றுகின்றனர்.
இலவச பிரயாணசீட்டு, வீடமைப்பு வசதிகள் ஊடகவியலாளர்களுக்கு குறிப்பாக வெளிமாவட்ட ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. அவ்வாறான உதவி வடக்கு, கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படல் வேண்டும். இந்த செய்தியை தென்மாகாண ஊடகவியலாளர்கள் தமது ஊடகங்களில் வெளிக்கொணர வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
தெற்கு ஊடகவியலாளர் சார்பில் பி. ஜெயதிஸ்ஸ தென்னக் கோன் உரையாற்றினார். கிழக்கு ஊடக இல்ல உதவி நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஷருக் எம். சலீமும் இதில் கலந்து கொண்டார்.