சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மூவரை கடந்த வெள்ளிக் கிழமை அட்டன் நீதிமன்ற நீதிவான் வீ.இராஜதுரை முன்னிலையில் ஆஜர் செய்தபோது எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கொட்டகலை சமாதான புரத்தை வசிப்பிடமாக கொண்ட ராமஜெயம் நடுநாயகம் (வயது 41) அவரது மனைவி சந்திரன் பிரேமா (வயது 31) உட்பட நெலும்குமாரி (வயது 25) ஆகிய மூவருமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொட்டகலை சமாதானபுர பகுதியில் சந்தேக நபரின் இல்லத்தில் மிகவும் இரகசியமான முறையில் நெடுங்காலமாக இடம்பெற்று வந்த சட்டவிரோத கருக்கலைப்பு நிலையமொன்றை கடந்த 8 ஆம் திகதி திம்புள்ள பொலிஸ் அதிகாரி சுனித் காமினி, கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி சாவித்திரி ரவிவர்மா, கொட்டகலை பொது சுகாதார அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணனுடன் இணைந்து திம்புள்ள பொலிஸாரும் தேடுதலை மேற்கொண்டனர்.
இச் சுற்றிவளைப்பின் போது அங்கிருந்த 20 முதல் 25 வயது வரையுள்ள திருமணமாகாத பெண்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.