மூவின மக்களும் இணைந்து வாழ்கின்ற நுவரெலியா மாவட்டத்தில் இளைஞர் , யுவதிகள் மத்தியில் இனநல்லுறவையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப வேண்டியது காலத்தின் தேவையாகும் என்று நோர்வூட் சமூக நலன்புரி அமைப்பின் நிகழ்ச்சித் திட்டப் பொறுப்பாளர் திருமதி கே.சந்திரமதி தெரிவித்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர், யுவதிகளுக்காக அட்டன் சீடாவள நிலையத்தில் இடம்பெற்ற செயலமர்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஒக்ஸ்பார்ம் பெருந்தோட்டப்பகுதி நிகழ்ச்சித் திட்டப் பொறுப்பாளர் திருமதி மாலா ரத்னவீர மற்றும் களியபெருமாள் கத்தரின் ஜோன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தச் செயலமர்வில் கலந்து கொண்ட இளைஞர் , யுவதிகளுக்கு இன நல்லுறவு தொடர்பான களப்பயிற்சிகள் நடத்தப்பட்டன.
திருமதி. கே.சந்திரமதி தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;
"நுவரெலியா மாவட்டத்தில் பொதுவாக மூவினத்தவர்களும் ஒன்றாகவே வாழ்கிறார்கள். இம்மாவட்டத்தில் இன முரண்பாடுகள் ஏற்படும்போது இளைஞர்கள் மத்தியில் புரிந்துணர்வு குறைந்துவிடுகின்றது.
குடும்பங்களில் முரண்பாடுகள் ஏற்படும்போது அது அப்பகுதி மக்களையும் சமூகத்தையும் வெகுவாகப் பாதித்து வேறு பிரச்சினைகள் உருவாகக் காரணமாக அமைகிறது. இச்சந்தர்ப்பத்தில் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
இனங்களுக்கிடையே முரண்பாடுகள் ஏற்படும்போது இளைஞர்கள் சந்தோஷத்தை இழந்து மனோரீதியான தாக்கத்திற்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.
சமூகத்திலோ, குடும்பத்திலோ பிரச்சினைகள் ஏற்படும்போது பாதிக்கப்படுபவர்கள் இளைஞர்களே.
எனவே, நாம் இளைஞர்களுக்கு நிகழ்ச்சித்திட்டம் செய்யும்போது மூவின இளைஞர்களையும் ஒன்றிணைப்பதன் மூலம் ஆலோசனைகளையும் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கிறது.
குழு ஆய்வில் கலந்துகொள்ளும் பொழுது தங்கள் இனங்களை மறந்து குழு செயல்திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள். இதன் வழியாக மனரீதியான மாற்றம் ஏற்படுகின்றது.
இளைஞர்கள் மத்தியில் உறவைக் கட்டிஎழுப்ப அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் , சமூகத் தலைவர்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்குவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
இவற்றினைக் கருத்திற் கொண்டு முதற் கட்டமாக அம்பகமுவ, கொத்மலை பிரதேச சபைகளுக்கு உட்பட்ட இளைஞர்கள் , யுவதிகளை தெரிவு செய்து அவர்களுக்கு ஒன்றிணைந்த நிகழ்ச்சித் திட்டங்களை நடத்துவதன் மூலமாக சமூக உறவைக் கட்டி எழுப்பக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளோம்.
இதன்மூலமாக பின்வருவனவற்றை எதிர்பார்க்கின்றோம்.
இளைஞர்கள் மத்தியில் ஆழமான உறவுகள் ஏற்படும் . (ஆண், பெண்)
இதன் வழியாக ஏற்றுக் கொள்ளும் தன்மையும் நம்பிக்கையும் ஏற்படுவதோடு தனிநபர், குழுக்கள் ரீதியான உறவுகள் அதிகரிக்கும்.
இளைஞர்களின் மனதில் உள்ள சந்தேகங்கள் நீக்கப்பட்டு அபிவிருத்திகளை நோக்கிய சிந்தனைகள் அதிகரிக்கும். இனங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் குறையும். இன முரண்பாடுகளை மறந்து ஒன்றிணைந்த செயற்றிட்டங்களை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் , வாய்ப்புகள் எதிர்காலத்தில் இளைஞர்கள் மத்தியில் உருவாகும்" என்றார்.