புலத்கொஹுபிட்டிய துல்கல பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளமையினால் இப்பகுதியிலுள்ள பொது மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு புலத்கொஹுபிட்டிய பிரதேச செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இப்பகுதியில் கடைவீதியை அடுத்துள்ள மலைப்பிரதேசமே மண்சரிவு அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.
இப்பகுதியில் மண்திட்டுக்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், சேற்று நீர் வெளியேறுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமைகளால் இவ்விடத்திலுள்ள 7 வியாபார நிலையங்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன.
மேட்டுப்பாங்கான இடங்களிலிருந்து நீர் வடிந்து வியாபார நிலையங்களுக்குள் வருவதாகவும் வியாபார நிலையங்களில் சுவர்கள் மற்றும் தரைகளிலும் வெடிப்புகள் காணப்படுவதாகவும் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1989 ஆம் ஆண்டு இப்பகுதியில் ஏற்பட்ட பெரு வெள்ளத்திலும் பாதிப்படையாத இப்பகுதியில் நாளுக்கு நாள் மண்சரிவு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். தமக்கு இப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு கூறப்படுகின்ற போதிலும் நாம் நீண்டகாலமாக செய்துவரும் வியாபாரத்தைத் தொடரக்கூடிய இடம் வழங்கப்படவேண்டுமென இவர்கள் கூறுகின்றனர். இதேவேளை, பாதிக்கப்படும் சொத்துகளுக்குரிய நஷ்டஈடு வழங்கப்படுமென பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.