மலையக சிறார்களை வீட்டு வேலைக்காக சேர்த்து பணம் சம்பாதிக்கும் தரகர்களால், அச்சிறுவர்களின் எதிர்காலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக பவர் நிறுவனத்தின் உறுப்பினரான கே.ரஞ்சனிமாலா தெரிவித்தார்.
மேலும் பணத்துக்காக பிள்ளைகளை செல்வந்தர் வீடுகளில் பணியாற்ற அனுமதிக்கும் பெற்றோராலும் இச் சிறுவர்களின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மலையக சிறுவர்களின் நல உரிமைகளை பேணுவதன் அவசியத்தை வலியுறுத்தி வெளியான அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
சிறுவர்களின் நீண்டகால நலன்களை கவனத்தில் கொண்டு, அவர்களுக்கென பல விசேட உரிமைகள் வகுத்துரைக்கப்பட்டுள்ள போதிலும், குறிப்பாக மலையக, சிறார்களின் நலன்கள் எந்தளவுக்கு பேணப்படுகின்றன என்பது இன்று கேள்விக்குறியாகவே உள்ளது.
இந் நாட்டு பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மலையக மக்கள் பரம்பரை பரம்பரையாக தோட்ட தொழிலாளர்களாகவே தமது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களின் பிள்ளைகளில் ஒரு சிறிய தொகையினர் மாத்திரமே கௌரவமான தொழில்களில் அமர்ந்துள்ளனர்.
ஆனால், தொடர்ந்தும் பல மலையக சிறுவர் சிறுமியர் கடைகளிலும் வீடுகளிலும், வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். சிறுவர் சிறுமியரை வேலக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றமாயினும் சில பெற்றோர் பணத்துக்காக தமது பிள்ளைகளை பணக்கார வீடுகளில் வேலைக்கு விடுகின்றனர்.
மலையகப் பிள்ளைகளை தோட்டங்களிலிருந்து கூட்டிச் சென்று வீட்டு வேலைக்குச் சேர்த்து அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் புரோக்கர்கள் நகர்ப்புறங்களிலும் தோட்டப்புறங்களிலும் இருக்கின்றனர்.
இதுவும் மலையகப் பிள்ளைகள் கல்வி கற்காமல் வேலைக்காரர்களாகவும் அடிமைகளாகவும் தமது வாழ்க்கையைக் கழிக்க வழிவகுக்கின்றது. அது மட்டுமல்ல, பணக்கார வீடுகளில் கிடைக்கும் உணவு, உடைகள் மற்றும் பணத்தை தஞ்சமாக எண்ணிவரும் நிலைக்கு அவர்களை தள்ளியுள்ளது.
மலையக சமுதாயம் தொடர்ந்தும் அடிமைகளாகவும், கல்வி அறிவு அற்றவர்களாகவும் வாழ வேண்டுமா? நாம் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை நமது பிள்ளைகள் சமுதாயத்தில் ஓர் நல்ல பிரஜையாகவும் அந்தஸ்துள்ள மனிதர்களாகவும் உருவாக வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் எண்ண வேண்டும்.
இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பது போல் சிறு வயதில் அவர்களுக்குரிய சிறந்த கல்வி வழியினை பெற்றோர் காண்பித்துவிட்டால் அவர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வாய்ப்பாக இருக்கும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.