* பிரதிக்கல்விஅமைச்சர் சச்சி
ஒரு சமூகம் வளர்ச்சியடைந்துள்ளதென இனங்காணப்படும் போது, அது அச்சமூகத்தின் கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள அபார வளர்ச்சியையே வெளிப்படுத்துவதாக பிரதிக் கல்வி அமைச்சர் மு.சச்சிதானந்தன் தெரிவித்தார்.
எனவே, இந்த வளர்ச்சி நிலைக்கு முதற்காரணமான ஆசிரிய சமூகம், போற்றிக் கௌரவிக்கப்படுவது இன்றியமையாதது எனவும் பிரதி அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டார்.
பதுளை ஊவா நூலக சேவை கேட்போர் கூடத்தில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற சாதனையாளர்களைப் பாராட்டும் வைபவத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றுகையிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பசறை தமிழ் மத்திய கல்லூரி அதிபர் பெ.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி ஆகியதுறைகளில் சாதனை படைத்தவர்களை பாராட்டி கௌரவிக்கும் இவ்விழாவினை பிரதியமைச்சர் ஏற்பாடு செய்திருந்தார்.
அங்கு உரையாற்றிய பிரதி அமைச்சர் தொடர்ந்து தமதுரையில்; எனக்கு அரசியல் என்பது புதிதானதொன்றல்ல. ஊவா மாகாணசபை உறுப்பினராக 15 வருடங்கள் சேவையாற்றியிருக்கின்றேன். 10 வருடங்களாக ஊவா மாகாண தமிழ்க்கல்வி அமைச்சராக இருந்து வந்துள்ளேன். தற்போது மத்திய அரசின் பிரதிக் கல்வி அமைச்சரென்ற பொறுப்புள்ள பதவியிலிருந்து வருகின்றேன்.
பெருந்தோட்டத்துறை மாணவ சமூகத்தினருக்கு தரமுள்ள கல்வியை வழங்க வேண்டும். அதற்கான விசேட திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றேன். எமது நாட்டின் இலவசக் கல்வியை இதுவரை பூரணமாகவே எமது மாணவ, மாணவிகள் பெறவில்லை. அதைக் கருத்திற்கொண்டு பெருந்தோட்டத்துறை மாணவ சமூகத்தினரும் இலவசக் கல்வியின் பூரண பயனை அனுபவிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன்.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்கள் நெருந்தோட்டத்துறை கல்வியை அபிவிருத்தி செய்யும் வகையில், 402 ஆசிரியர்களுக்கு நியமனங்களை வழங்க ஏற்பாடு செய்தார். அதையடுத்து எமது தலைவரும், அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் 3,179 தமிழாசிரியர் நியமனங்களையும் 600 இஸ்லாமிய ஆசிரிய நியமனங்களையும் வழங்க ஏற்பாடு செய்தார்.
அத்துடன், 4750 தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்களை வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்றையும் நடைமுறைப்படுத்தியுள்ளேன். அதன் பிரகாரம் ஊவாமாகாணப் பாடசாலைகளுக்கென 780 பேர் நியமனம் பெற்றுள்ளனர்.
மேலும், 5500 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனங்களைப் பெற்றுக்கொடுக்கவும், எனது அழுத்தத்தின் பேரில் அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்டிருக்கின்றது. இந்நியமனங்களில் 1500 பட்டதாரிகள் தேசியப் பாடசாலைகளுக்கும், 4000 பட்டதாரிகள் மாகாணப் பாடசாலைகளுக்கும் உள்வாங்கப்படுவர்.
ஊவா, மத்திய, சப்ரகமுவ மாகாண பெருந்தோட்டப்பாடசாலைகளின் துரித அபிவிருத்தியை முன்னெடுக்கவென 500 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளேன். இந்நிதி மாகாணப் பாடசாலைகளின் தேவைகள் இனம் காணப்பட்டு, அதனடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படும் என்றார்.
ஊவா மாகாணசபை உறுப்பினர் எம்.பி.லோகநாதன் தமதுரையில், "பெருந்தோட்டப் பாடசாலைகளின் மேம்பாடுகள் கருதி, ஆரம்பம் தொட்டு தொடர்ந்தும் இ.தொ.கா.வின் தலைவர்களே மேலான சேவைகளை வழங்கிக்கொண்டிருக்கின்றனர். பெருந்தோட்டப் பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறையை போக்கும் வகையில் எமது தலைவர் 3179 ஆசிரிய நியமனங்களை பெற்றுக்கொடுக்க முயன்றபோது, அது தடுத்து நிறுத்தப்பட்டு, அந்நியமனங்களை இரத்துச் செய்யும் விடயம் நீதிமன்றம் வரை சென்றது. அவ்வேளையில், இ.தொ.கா.40 இலட்சம் ரூபா வரையில் செலவு செய்து நியமனங்களைப் மீளப் பெற முடிந்தது. வழங்கப்பட்டிருக்கும் ஆசிரியர் நியமனங்களும் போதுமானதாக இல்லை. தொடர்ந்து நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யவும், இ.தொ.கா.நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது" என்றார்.
"ரீப்" நிறுவன வேலைத்திட்ட இணைப்பாளர் எம்.ஆர்.விஜயானந்த தமதுரையில்;
பெருந்தோட்டங்களில் 833 பாடசாலைகள் மட்டுமே உள்ளன. இவற்றில் 310 பாடசாலைகளில் மட்டுமே சிரேஷ்ட இடை நிலைக்கல்வி போதிக்கப்பட்டு வருகின்றது. கல்வித்திட்ட முறைமையில் கட்டாயக்கல்வி, இடை நிலைக்கல்வி, சிரேஷ்ட இடை நிலையக்கல்வியென்று முப்பெரும்பிரிவுகளாக வகுக்கலாம்.
இப்பிரிவுகளினடிப்படையில் 87 வீதமானமாணவர்களே கட்டாயக்கல்வியில் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர். 12 வீதமானவர்கள் மட்டுமே சிரேஷ்ட இடை நிலைக்கல்விப் பிரிவுக்கு செல்கின்றனர். சிரேஷ்ட இடைநிலைக் கல்வி என்பது 13 ஆம் தரத்தினையே குறிக்கும் என்றார்.
இந்நிகழ்வில் தினக்குரல் விநியோகப்பிரிவு சார்பாக சற்குணம், நரேந்திரன், கண்டி அ.இராமன், பிரதி கல்வி அமைச்சரின் ஆலோசகர் டாக்டர்.டி.கமலநாதன், ஊவா மாகாண சபை உறுப்பினர் கே.விஸ்வநாதன், உதவிக் கல்விப் பணிப்பாளர் பி.வேதாந்தமூர்த்தி உட்பட பலர் உரை நிகழ்த்தினர்.
மேற்படி சாதனையாளர்களைப் பாராட்டும் நிகழ்விற்கு "தினக்குரல்" பத்திரிகை பூரண அனுசரணைகளை வழங்கியிருந்ததுடன், "தினக்குரல்" சார்பாக பிரதி அமைச்சர் எம்.சச்சிதானந்தன் பொன்னாடை போர்த்தியும் கௌரவிக்கப்பட்டார்.
இறுதியாக, பிரதி அமைச்சர் பதுளைப் பகுதியில் இனம் காணப்பட்ட எட்டு தமிழ்ப் பாடசாலைகளுக்கான பாண்ட்வாத்திய இசைக்கருவித் தொகுதிகளையும் குறிப்பிட்ட பாடசாலை அதிபர்களிடம் வைபவ ரீதியாகக் கையளித்தார்.