* இறுதியஞ்சலி நிகழ்வில் கடற்புலிகளின் தளபதி சூசை தெரிவிப்பு
திருகோணமலையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கரும்புலித் தாக்குதல் படகின் இயந்திரக் கட்டமைப்பை வலுவாகக் கட்டமைத்து கரும்புலி வீரர்களை வழி அனுப்பியவர் லெப். கேணல் கடாபி என்று விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற லெப். கேணல் கடாபியின் இறுதியஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றிய கேணல் சூசை மேலும் தெரிவித்துள்ளதாவது;
"15 ஆண்டுகளுக்கும் மேலாக எமது விடுதலைப் போராட்டத்தில் தமிழின விடுதலைக்காக பல்வேறு துறைகளில் உழைத்தவர் லெப்.கேணல் கடாபி.
1993 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப் போராட்டத்தில் இணைந்து பல களமுனைகளில் தனது திறமைகளை வெளிப்படுத்தியவர்.
இவரின் திட்டமிடலாலும் பற்றினாலும் கடற்புலிகளின் முதன்மை இயந்திரப் பொறியியலாளராக நியமிக்கப்பட்ட இவர், எமது தலைவர் பிரபாகரனின் உள்ளத்தில் ஆழமாக இடம்பிடித்த ஒரு போராளி.
தலைவருடன் கடற்பரப்பில் பயிற்சிப் படகுகளை பார்வையிடுவதிலும் தலைவர் அருகிலிருந்து படகைச் செலுத்தும் இயந்திர வல்லுநராகவும் இருந்தார்.
சனிக்கிழமை அதிகாலை திருகோணமலையில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதல் படகின் இயந்திரக் கட்டமைப்பை வலுவாகக் கட்டியமைத்து கரும்புலி வீரர்களை வழியனுப்பியவர் கடாபி.
ஒரு காலை இழந்த போதிலும் தொடராக விடுதலைப் பயணத்திற்கு ஓய்வின்றி உழைத்த ஒரு விடுதலை வீரன்".
இந்நிகழ்வு முல்லை மாவட்ட கடற்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் வேங்கைத் தமிழன் தலைமையில் நடைபெற்றது.
பொதுச் சுடரினை கடற்புலிகளின் தாக்குதல் தளபதி கங்கா ஏற்ற உடலுக்கு ஈகைச் சுடரினையும் மலர்மாலையினையும் தாயார், உடன்பிறப்புகள் சூட்டினர்.
மலர்மாலைகளை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை, கடற்புலிகளின தாக்குதல் தளபதி செழியன் ஆகியோர் சூட்டினர்.
உரைகளை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை, முல்லை மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசத் தலைவர் குணசிங்கம் ஆகியோர் ஆற்றினர்.