* நீதியமைச்சர் டிலான் பெரேரா கவலை
எம்.ஏ.எம். நிலாம்
எமது நாடு இன்று எதிர்கொண்டிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் மூலகாரணம் மாற்றுக் கருத்துகளை ஜீரணிக்க முடியாமலிருப்பதே எனத் தெரிவித்த துறைமுக அபிவிருத்தி நீதியமைச்சர் டிலான் பெரேரா, அடுத்தவர்களின் கருத்துகளை உள்வாங்கக் கூடிய மன நிலை ஏற்படாத வரை ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் சுட்டிக் காட்டினார்.
வேற்றுமையில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக நாம் தலை கீழாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் நிதானமாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின வைபவமும் மர்ஹும் எம்.ஏ.பாக்கீர் மாக்கார் நினைவு வைபவமும் நேற்று திங்கட்கிழமை மாலை கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்வி வட்ட கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு "வேற்றுமையில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதில் அரசியல் வாதிகளின் பங்கு" எனும் தொனிப் பொருளில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் டிலான் பெரேரா மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;
"நாங்கள் ஒவ்வொருவரும் எமது தனிப்பட்ட கருத்துகளையும் எண்ணங்களையும் மற்றவர்கள் மீது திணிக்கப் பார்க்கின்றோம். இந்தத் தவறான மனப்போக்கு காரணமாக எமக்கிடையே ஒற்றுமை பலமடைவதற்குப் பதிலாக விரிசல் தான் அதிகமாகின்றது. எம்மால் மாற்றுக் கருத்துகளை ஜீரணிக்க முடியாமலுள்ளது. அந்தளவுக்கு எமது மனங்கள் பக்குவப்படாமலிருப்பது கவலை தரக்கூடியதாகும். அதுவே இந்நாட்டில் நாம் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.
பல்லின சமுகத்தினர் வாழும் நாட்டில் இணைந்து வாழுதல், பரஸ்பரம் இனங்களுக்கிடையில் நல்லுறவையும் புரிந்துணர்வையும் கட்டியெழுப்புதல் போன்ற அம்சங்களை உறுதியுடன் முன்னெடுக்க முடிந்தால் வேற்றுமையில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவது கடினமான காரியமாகி விடாது.
சமூகங்களுக்கிடையே காணப்படுகின்ற சந்தேகம், மனக்குரோதங்களினால் எமக்கிடையே ஒற்றுமை உருவாகுவதற்குப் பதிலாக வேற்றுமை எனும் விஷம் வேறூன்றிப் போய்விட்டது. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதற்குப் பதிலாக ஒற்றுமையென்ற நிலையிலிருந்து வேற்றுமையை நோக்கி பாதாளத்துக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் இந்த விடயத்தில் தமது நிகழ்ச்சி நிரலை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன். சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை உறுதிப்படுத்துவதில் அரசியல்வாதிகள் பெரும்பங்களிப்புச் செய்ய முடியும். காலம் கடந்து போன கட்சி அரசியல் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து நாம் புதிய பாதைக்குள் நுழைய வேண்டும்.
இந்த முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் ஸ்தாபகரான பாக்கீர் மாக்கார் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தி நல்லதொரு மனித சமுதாயத்தைக் கட்டியெழுப்பக் கனவு கண்டார். அந்தக் கனவை நனவாக்குவதில் இவ்வியக்கம் காட்டும் ஆர்வத்தை பாராட்டுகின்றேன். அவரது இலட்சிய கனவை நனவாக்க நாம் முழு அளவில் ஒத்துழைக்கத் தயாராகவிருக்கின்றோம்.
வேற்றுமையில் ஒற்றுமையை கட்டியெழுப்புவது தொடர்பில் சகல சமூகங்களையும் புத்திஜீவிகளையும் உள்ளடக்கியதான கலந்துரையாடல் இதில் பிரதான பங்கு வகிக்க முடியும் என்பதையும் நினைவூட்ட விரும்புகின்றேன்".
என்.எம். அமீன் பேச்சு
வைபவத்துக்கு தலைமை வகித்த அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தலைவர் என்.எம். அமீன் தனது தலைமையுரையில் தெரிவித்ததாவது;
"இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு நடந்த அவலங்கள் இனிமேல் எந்தவொரு சமூகத்துக்கும் இனியொரு போதும் நடந்து விடக் கூடாது. சகல இனத்தவர்களும் ஒன்று பட்டால் மட்டுமே அதனைச் சாத்தியமாக்க முடியும். நாம் இனியொருபோதும் வேறுபட்டு நிற்க முடியாது. அரசியல் ரீதியிலோ, இன ரீதியிலோ வேறுபட முடியாது. நாம் சிறிய அளவில் வேறுபட்டால் கூட அது எம்மனைவரையுமே பலவீனப்படுத்தி விடும்.
அன்று முஸ்லிம்கள் வர்த்தகத்துறையில் கூடுதல் ஆர்வம் காட்டியதால் கல்வித்துறையில் பின்தங்கி விட்டனர். இன்று அதன் தாக்கத்தை உணரத் தலைப்பட்டுள்ளோம். முஸ்லிம்கள் கல்வித்துறையில் இன்று கூடுதலான ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
நாம் அரசியல் செய்யலாம். ஆனால், அந்த அரசியல் எம்மை பிளவுபடுத்தி விடக் கூடாது. கட்சி அரசியல் எம்மை சீரழித்து விட அனுமதிக்கக் கூடாது. நாம் செய்யும் அரசியல் எமது சமுதாயத்துக்கு பயன்படக் கூடியதாக அமைய வேண்டும்.
மர்ஹும் பாக்கீர் மாக்கார் எமக்குக் காட்டிய பாதை இந்த மண்ணில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான வழிகாட்டல்களாகும். அந்த வழிகாட்டல்கள் மூலம் நாம் இன, மத, மொழி, பேதங்களைக் கடந்து ஒரு பாரிய பணியை ஆரம்பித்துள்ளோம்." எனத் தெரிவித்தார்.