* ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு
எம்.ஏ.எம்.நிலாம்
எனது அரசியல் வாழ்க்கையில் 20 தேர்தல்களை எதிர்கொண்டிருக்கின்றேன். முதல்தடவையாக படுமோசமான அநீதியான மோசடி நிறைந்த தேர்தலாகவே கிழக்கு மாகாணசபைத் தேர்தலைச் சந்தித்தேன் எனத் தெரிவித்த ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தேர்தல் ஆணையாளர் சுயாதீனமாகச் செயற்பட்டு இத்தேர்தல் தொடர்பில் விசாரணைகளை நடத்த வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
தேர்தல் ஆணையாளரின் கூற்று அவரது சுயாதீனப் போக்குக்கு சவால் விடுப்பதாக அமைந்திருப்பதாகவும் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.
எதிர்க்கட்சித் தலைவரின் கேம்பிரிட்ஜ் ரெரஸ் இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;
நான் ஒரு கட்சியின் தலைவராகவும் அதற்கு முன்னர் செயலாளராகவும் இருந்து இதுவரையில் 20 தேர்தல்களை எதிர்கொண்டேன். முதற்தடவையாக முன்னொருபோதுமில்லாத விதத்தில் அடாவடித்தனமும் மோசடியும் அநீதியானதுமான தேர்தலாகவே கிழக்கு மாகாணசபைத் தேர்தல் காணப்பட்டது. தேர்தல் கண்காணிப்புக் குழுக்கள் ஒரேவிதமாக அவற்றின் கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றன. வன்முறைகளும் மோசடிகளும் அதிகம் இடம்பெற்றதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரசாங்கத்தின் அமைச்சர்கள் மூன்று குழுக்களாகப் பிரிந்து மூன்று மாவட்டங்களிலும் தங்களது அடாவடித்தனங்களை கட்டவிழ்த்து விட்டனர். வாக்களிப்பு நடப்பதற்கு 48 மணிநேரத்துக்கு முன்னர் வெளியூர்களிலிருந்தும் கொழும்பிலிருந்தும் காடையர்கள், குண்டர்கள் கிழக்கில் குவிக்கப்பட்டனர். பாதுகாப்பு நிலைகளில் இவர்கள் முகாமிட்டிருந்தனர்.
வாக்களிப்பு ஆரம்பித்த சிலமணி நேரத்துக்குள் வாக்குப்பெட்டிகள் நிரப்பப்பட்டன. பொலிஸார் உட்பட பாதுகாப்புத் தரப்போ தேர்தல் அதிகாரிகளோ நீதியாகச் செயற்படவில்லை. பொலிஸ் நிலையங்களில் தொலைபேசிகள் கூட செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தன.
இலங்கையின் தேர்தல் வரலாற்றில் படுமோசமான தேர்தலாகவே இதனைக்காண முடிந்தது. வாக்களிப்பு தினத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட மோசடிகளும் வன்முறைகளும் இடம்பெற்றதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆனால், தேர்தல் ஆணையாளர் நியாயமான தேர்தல் நடந்ததாகக் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையாளர் மீதோ எதிர்காலத்தில் தேர்தல்கள் தொடர்பாகவோ நாட்டு மக்கள் நம்பிக்கை வைக்க முடியாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி மோசடி மூலம் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் உண்மைகளை நாட்டு மக்களுக்கு பகிரங்கப் படுத்தவிருக்கின்றோம்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் எதிர்காலத்தில் தேர்தல் மீதான நம்பிக்கையை உறுதிப்படுத்தவும் சில உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இல்லாவிட்டால் எதிர்காலத்தில் தேர்தலின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்து விடுவார்கள். அதேசமயம், எதிர்காலத்தில் மேலும் மோசமான விளைவுகளை மக்கள் சந்திக்க வேண்டியேற்படலாம் எனவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.