கிழக்கு மாகாண சபைத் தேர்தல் நீதியானதும் சுதந்திரமானதாகவும் நடைபெற்றதெனக் கூறுவது கடினமாகுமென தேசிய சமாதானப் பேரவையின் பணிப்பாளர் கலாநிதி ஜெகான் பெரேரா தெரிவித்தார்.
தேசிய நூலக கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற `பவ்ரலின்' ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
தேர்தல் ஓரளவு சுமுகமாகவே நடைபெற்றதெனக் கூறலாம்.
எனினும், கிழக்குத் தேர்தல் நீதியாகவும் சுதந்திரமாகவும் நடைபெற்றதெனக் கூறுவது கடினமானதாகும் என்றார்.
இங்கு கிங்ஸ்லி ரொட்றிக்கோ கூறுகையில்;
கிழக்குத் தேர்தல் 80 சதவீதம் அமைதியாகவே நடைபெற்றது. கிழக்கு மாகாணத்திற்கு வெளியேயிருந்து சென்றவர்களினாலேயே அங்கு சில மோசமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அரச வளங்களும் அதிகளவில் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையாளரும் அரச அதிகாரிகளும் சிறந்த முறையில் செயற்பட்டனர். வடமேல் மாகாண சபைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் கிழக்குத் தேர்தல் சிறப்பானதெனக் கூறுவது பொருத்தமானது.
தேர்தல் தினத்தன்று விடுதலைப்புலிகள் மக்களை இலக்குவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சிலர் காயப்பட்டும் உள்ளனர். எப்படியிருந்தபோதும் நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்திற்கு சிறந்த ஆரம்பமென இத்தேர்தலை குறிப்பிட முடியுமென்றார்.
பவ்ரல் சார்பில் தேர்தலில் வெளிநாட்டுக் கண்காணிப்பாளராக செயற்பட்ட மலேசிய நாட்டை சேர்ந்த அலி கூறுகையில்;
கிழக்குத் தேர்தலில் சில அச்சுறுத்தல் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. சிலர் ஆயுதங்களுடன் நடமாடினர். தேர்தல் காலத்தில் பல அரசாங்க நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன்போது மக்களுக்கு காசோலைகளும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இவ்வைபவங்களில் ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர்களும் கலந்துகொண்டனர். இவை சிறப்பான அரசியல் கலாசாரத்திற்கு உந்துசக்தியாக அமையவில்லை எனக் குறிப்பிட்டார்.