* பாலாவியில் சம்பவம்
புத்தளம் பாலாவி வீதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் வெள்ளை வானில் வந்த ஆயுதம் தாங்கிய குழுவினரால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடத்தப்பட்ட யுவதி புத்தளம் கடுமையான்குளத்தை சேர்ந்த 26 வயதான தேன்மொழி சங்கீதா என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று பாலாவியிலுள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றில் தொழில்புரிந்துவிட்டு தன் அதிகாரிகளுடன் பஸ் நிலையத்திற்கு ஆட்டோவில் வரும்போதே வெள்ளை வானில் ஆயுதங்களுடன் வந்த குழுவினரால் இவர் கடத்திச் செல்லப்பட்டார்.
கொழும்பு பக்கம் இவர் கடத்தி செல்லப்பட்டதாகவும், கடத்தப்பட்டவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் கடத்தப்பட்டது குறித்து நோர்வே அகதிகளுக்கான மையம், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் புத்தளம் பொலிஸ் நிலையம் ஆகியவற்றில் உறவினர்களால் முறையிடப்பட்டுள்ளது.