* பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சாட்சியம்
யோ. நிமல்ராஜ்
மூதூரில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் அக்ஷன் பாம் ஊழியர்கள் பதினேழு பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாதென ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.
மூதூரில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் அக்ஷன்பாம் நிறுவன ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகள் ஜனாதிபதி ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இங்கு தொடர்ந்து நான்காவது நாளாக சாட்சியமளித்து மூதூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவிக்கையில்;
" மூதூரிலுள்ள பொலிஸ் சோதனைச் சாவடிகளில் ஊர்காவல் படை வீரர்களும் கடமையில் இருந்தனர்.
அதன்படி மூதூர் பொலிஸ் நிலையத்தில் 45 பேரும் இறங்குதுறை சி சோதனைச் சாவடியில் 50 பேரும் 58 ஆம் இலக்கச் சோதனைச் சாவடியில் 15 பேரும் தோப்பூர் சோதனைச் சாவடியில் 30 பேரும் சாந்திநகர் சோதனைச் சாவடியில் 15 பேரும் பச்சனூர் சோதனைச் சாவடியில் ஏழுபேரும் நகரச் சோதனைச் சாவடியில் ஒன்பது பேரும் ரெலிகொம் சோதனைச் சாவடியில் ஐந்து பேரும் கடமையில் இருந்தனர்.
நகரத்திலுள்ள பொலிஸ் சோதனைச் சாவடிக்கு சரச்சந்திரவே பொறுப்பதிகாரி ஆவார்.
சரச்சந்திர தான் ஆகஸ்ட் முதலாம் திகதி நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பாக என்னுடன் கதைத்தார். வேறு எவரும் அது தொடர்பாக என்னுடன் கதைக்கவில்லை.
அத்துடன், காதர் என்ற ஊர்காவல் படை வீரரும் இத்தாக்குதல் தொடர்பாக என்னுடன் கதைத்திருக்கவில்லை.
மூதூர் நகரை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்பதற்காக திருகோணமலையிலிருந்து கொமாண்டோ இராணுவப் படையினர் எமது பொலிஸ் நிலையத்துக்கு வந்திருந்தனர்.
அவர்கள் நான்காம் திகதி காலை மோதல்களுக்காக புறப்பட்டுச் சென்ற போதும் ஊர்காவல் படைவீரரை அவர்களுடன் செல்லுமாறும் நான் உத்தரவிடவில்லை.
அதேபோல, இறங்குதுறைப் பக்கம் செல்லுமாறும் ஊர்காவல் படை வீரர்களுக்கு நான் உத்தரவிடவில்லை.
மோட்டோ றோலோ தொலைத் தொடர்பு சாதனம் மூலம் தான் எமது பொலிஸ் நிலையத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்வோம்.
ஆனால், 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதியன்று குறிப்பிட்ட தொலைத் தொடர்பு சாதனங்கள் செயலிழந்திருந்தன.
திரும்ப ஆகஸ்ட் ஐந்தாம் திகதி தான் அத்தொலைத் தொடர்பு சாதனங்கள் செயற்பட ஆரம்பித்தன.
பொலிஸ் சார்ஜன்ட் காமினியும் மோட்டோறோலோ தொலைத்தொடர்பு சாதனத்தை தன் வசம் வைத்திருந்தார்.
மூன்றாம் திகதி ஆகஸ்டில் நடைபெற்ற தாக்குதலில் நான்கு ஊர்காவல் படை வீரர்கள் இறந்திருந்தனர்.
எமது பொலிஸ் நிலையத்தில் 156 ஊர்காவல் படைவீரர்களும் 223 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
ஊர்காவல் படை வீரர்களிற்கு இரண்டு வாரகால இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டு அவர்களுக்கு ஆயுதம் வழங்கப்படும்.
ஊர்காவல் படை வீரர்கள் மூதூர் மற்றும் தோப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்தே கடமைக்கு வருவர்.
ஒசாமா குழு பற்றி எதுவிதமான தகவல்களும் எனக்குத் தெரியாது. அவர்களைப் பற்றி நான் கேள்விப்படவும் இல்லை.
ஆனால், நான் சம்மாந்துறையில் இருந்த போது ஜிகாத் குழுபற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன்.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் மூதூர் பகுதியில் நடந்த தாக்குதலில் ஊர்காவல் படை வீரர்களின் வீடுகள் சேதமடைந்ததுடன் அவர்களின் உறவினர்களும் காயமடைந்திருந்தனர்.
இந்நிலையிலும் அவ்வுறவினர்களைச் சென்று பார்வையிட வேண்டுமென எமது பொலிஸ் நிலையத்திலிருந்த ஊர்காவல் படை வீரர்கள் கேட்டிருந்தும் நான் அதற்கு அனுமதியளிக்கவில்லையென சட்டத்தரணி எஸ். இரட்ணவேலின் குறுக்கு விசாரணைகளுக்கு பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், குறிப்பிட்ட சாட்சியை குறுக்கு விசாரணை செய்த இராணுவத் தரப்புச் சட்டத்தரணி கோமின் தயாசிறி கண்டி தலதா மாளிகை, மத்திய வங்கி, ஹெப்பிட்டிகொலாவ, அம்பாறை போன்ற குண்டுத் தாக்குதல்கள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டவை உங்களுக்குத் தெரியுமாவெனக் கேட்ட போது சாட்சி தெரியுமெனப் பதிலளித்தார்.
இந்நிலையில் நேற்றைய இவரின் சாட்சியம் நிறைவு பெற்றது. மீண்டும் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பார்.