* ஆணையாளர் மீது கடும் கண்டனம்; நீதிமன்றம் செல்ல முடிவு
எம்.ஏ.எம். நிலாம்
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பான தேர்தல்கள் ஆணையளரின் கூற்றை கடுமையாகக் கண்டித்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் தேர்தல் முறைகேடுகளுக்கெதிராக நீதிமன்றம் செல்லப் போவதாகவும் நாடுபூராவும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தவும் அரசின் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.
கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமையை பறித்தெடுத்தமைக்கான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும் தேர்தல்கள் ஆணையாளருமே ஏற்க வேண்டுமெனவும் இரு கட்சிகளும் சுட்டிக் காட்டியுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவரின் கேம்பிரிட்ஜ் ரெரஸ் இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவும் ஷ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் மேற்கண்ட குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர்.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இங்கு கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது;
கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நீதியாகவும் சுதந்திரமாகவும் நடத்த காத்திரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வேட்பு மனுத்தாக்கல் செய்த நாள் முதல் நாம் வலியுறுத்தி வந்தோம். ஆனால், தேர்தல் பிரசார காலத்தில் கூட ஆளும் தரப்பும் பிள்ளையான் குழுவும் எதிரணியினர் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்ட வண்ணமே இருந்தனர். இவை குறித்து எத்தகைய முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பாதுகாப்புத்தரப்போ, தேர்தல் திணைக்களமோ எதுவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.
இவை எல்லாவற்றையும் விட தேர்தல் தினத்தில் கிழக்கு மக்களின் ஜனநாயக உரிமைக்கு வேட்டு வைக்கப்பட்டது. அனைத்துக் கண்காணிப்புக்குழுக்களுமே தேர்தல் வரலாற்றிலேயே படுமோசமான மோசடிகளும் வன்முறைகளும், முறைகேடுகளும் நிறைந்த தேர்தலாகவே வர்ணித்திருக்கின்றன. இத்தேர்தல் மோசடியும், ஊழலும் நிறைந்ததென்பது வெட்ட வெளிச்சமாகக் காணப்படுகின்றதொரு சூழ்நிலையில் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க நியாயமான தேர்தலென்று தெரிவித்து ஆளும் தரப்பின் அடாவடித்தனம், முறைகேடுகளை மூடி மறைக்கப்பார்க்கின்றார்.
அரசியல் கட்சிகளும் நாட்டு மக்களும் தேர்தல் ஆணையாளர் மீதும் தேர்தல் திணைக்களத்தின் மீதும் நம்பிக்கை இழந்து விட்டனர். எதிர்காலத்தில் ஜனநாயகத் தேர்தல் தொடர்பில் நம்பிக்கை வைக்க முடியாத விதத்திலேயே தேர்தல் ஆணையாளரின் செயற்பாடுகள் காணப்படுகின்றன. அவர் சுயாதீனமாகச் செயற்படத் தவறியுள்ளார்.
கண்காணிப்புக் குழுக்களின் அறிக்கைகளைக் கூட பார்வையிடாமல் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கமைய அவர் செயற்பட்டுள்ளார். இந்த தேர்தல் ஆணையாளர் எந்த அடிப்படையில் தேர்தலை நியாயமானதெனக் கூற முற்படுகின்றார் என்பதை விரிவாக தெளிவுபடுத்த வேண்டும். ஆணையாளர் நேர்மையாகச் செயற்படத் தவறி விட்டதாகவே நாம் உணர்கின்றோம். எதிர்கலாத்தில் அவர் தலைமையில் தேர்தல்கள் நடத்தப்படுமானால் அது பலத்த சந்தேகத்தையே தோற்றுவிக்கும். தேர்தல் ஆணையாளர் தமக்குரிய சுயாதீனப் போக்கிலிருந்து விலகிச் செயற்படத் தொடங்கியுள்ளார்.
17 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கமைய சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்காமல் ஜனாதிபதி சர்வாதிகாரப் போக்கில் நாட்டை வழிநடத்த முற்படுவதையே அவதானிக்க முடிகிறது. சுயாதீனமான தேர்தல், பொலிஸ், மனித உரிமைகள் ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பின் தேர்தல் ஆணையாளரும், பொலிஸ் மற்றும் பாதுகாப்புத்தரப்பும் முறைகேடுகளில் இடுபடுவதை தவிர்த்திருக்க முடியும். இன்று தேர்தல் ஆணையாளர் மீதும், திணைக்களத்தின் மீதுமான நம்பிக்கைத்தன்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
பவ்ரல், கபே, சி.எம்.ஈ.வி கண்காணிப்புக் குழுக்களின் அறிக்கையின் படி பல வக்களிப்பு நிலையங்களில் வாக்குகள் இரத்துச் செய்யப்பட்டிருக்கவேண்டும். தேர்தல் ஆணையாளர் அதனைச் செய்யத்தவறிவிட்டார். இலங்கைத் தேர்தல் வரலாற்றில் முன்னொருபோதும் இடம்பெறாத முறைகேடுகளும், வன்முறைகளும், மோசடிகளும் இடம்பெற்றிருப்பது பகிரங்கமாகவே தெரிந்துள்ள நிலையில் தான் அரசுக்கு சாதகமாக செயற்பட்டது மட்டுமின்றி தேர்தல் கடமைகளில் ஈடுபட்ட அதிகாரிகளையும் அதற்குப் பயன்படுத்திக்கொண்டுள்ளார்.
தற்போது நடைபெற்றிருக்கும் வாக்களிப்பு வீதத்தின் படி முறை கேடுகள் வாக்கு மோசடி இடம்பெற்றிருக்காவிட்டால் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியே வெற்றியீட்டியிருக்கும். அதன்படி ஐ.தே.க. 17 ஆசனங்களையும் ஐ.ம.சு.கூ. 15 ஆசனங்களையும் ஜே.வி.பி. 2 ஆசனங்களையும் மற்றொரு கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டிருக்கமுடியும்.
மட்டக்களப்பில் பிள்ளையான் குழுவும், அமைச்சர் அமீர்அலி, ஹிஸ்புல்லாஹ் கோஷ்டியும், திருகோணமலையில் றிஷாத், பாயிஸ் குழுவும் திருக்கோவிலில் இனியபாரதி குழுவும் வன்முறை, மோசடி, முறைகேடுகளில் ஈடுபட்டனர். தட்டிக்கேட்க ஆளில்லாத நிலையில் கிழக்கு மாகாணம் காணப்பட்டது.
இவற்றையெல்லாம் அறிந்த நிலையிலும் தேர்தல் ஆணையாளர் சுயாதீனமாகச் செயற்படும் தமது கடப்பாட்டை ஆளும் தரப்புக்கு தாரைவார்த்துவிட்டார்.
எனவே நாம் சட்டரீதியான நடவடிக்கையை உடனடியாகவே எடுக்கவிருக்கின்றோம். அத்துடன் மக்களை அணிதிரட்டி அடுத்த வாரத்தில் வீதிப்போராட்டத்தில் குதிக்கவிருக்கின்றோம்' என ரணில் தெரிவித்தார்.