வன்னிப்பிரதேசத்தில் பல்வேறு எல்லைப் பகுதிகளிலும் அரசபடையினர் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவதைத் தொடர்ந்து வன்னிப்பகுதிகளில் யுத்தம் காரணமாகவும் புலிகள் இயக்கத்தினர் தமது இயக்கத்தில் சேர்த்துக் கொள்வதற்காக மக்களைப் பலாத்காரமாக கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாலும் வன்னியில் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கிராமங்களிருந்து மக்கள் தப்பியோடி அரச படையினரின் பிரதேசங்களுக்குப் பெருந்தொகையில் வர ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் அப்பிரதேசங்களில் வாழும் மக்களைப் பாதுகாப்புக் கேடயமாகப் பயன்படுத்திச் செயற்பட்டு வரும் புலிகள் இயக்கத்தினருக்கு இவ்வாறு அந்தப் பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேறுவதைத் தடுப்பதற்கு முயன்று வருகின்றனர். இதன் உச்சக்கட்டமாக தற்போது புலிகள் இயக்கம் வன்னியிலிருந்து மக்கள் வெளியேறுவதற்குத் தடை விதித்துள்ளதாகவும் அவ்வாறே வெளிப்பிரதேசங்களிலிருந்து மக்கள் உட்பிரவேசிப்பதைக் கட்டுப்படுத்தியுள்ளதாகவும் வன்னியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவித்துள்ளன. இதற்கேற்ப ஏ.9 பாதையில் ஓமந்தை காவலரண் ஊடாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் பிரவேசிக்கும் மக்கள் கனகராயன்குளத்திற்கு அப்பால் உள்ளே செல்வதற்கு புலிகள் இயக்கம் தடைவிதித்துள்ளது.
இதேவேளை அவ்வாறு தமது பிரதேசத்திற்கு வரும் மக்களிடமும் சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணைகளை புலிகள் இயக்கத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இதற்குக் காரணம் புலிகள் இயக்கத்துக்கு எதிராகச் செயற்பட்டுவரும் புளொட் அமைப்பினரும், ஈ.பி.டி.பி. அமைப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எவ்.அமைப்பின் வரதராஜன் குழுவினரும் புலிகளின் பிரதேசத்துக்குள் நுழைந்து புலிகள் இயக்கத்துகெதிரான செயற்பாடுகளை ஆரம்பித்து வருவதாகத் தெரிவிக்கப்படும் தகவல்களே ஆகும். மேலும் இதைத் தொடர்ந்து புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவினரும், தீவிரமாக செயற்பட்டுவருவதாகவும் முக்கியமாக புளியங் குளம் புலிகள் இயக்க காவலரணில் வைத்து பிரவேசிக்க வரும் ஒவ்வொருவரும் புலிகள் இயக்க புலனாய்வுப் பிரிவினரால் நெடுநேரம் விசாரிக்கப்படுவதாகவும் தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் பலர் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கிருந்து உள்ளே செல்ல அனுமதிக்கப்படுபவர்களுக்கும் கனகராயன்குளம் பிரதேசம் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை புலிகளின் பிரதேசங்களிலிருந்து அரச படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள வவுனியா பிரதேசத்துக்கும் கொழும்புக்கும் செல்ல வரும் மக்களில் 12 வயதுக்கும் 35 வயதுக்கும் உட்பட்டவர்கள் அவ்வாறு செல்வதைப் புலிகள் இயக்கம் தற்போது தடைசெய்துள்ளதாகவும் அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவ்வாறு அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்குச் செல்வதற்கு 12 முதல் 35 வயதுவரையான மக்களைத் தவிர ஏனைய வயதுடையோரை அனுமதிப்பதிலும் புலிகள் இயக்கம் கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. இதற்கேற்ப ஏனைய வயதினரில் ஒருவர் புலிகளின் பிரதேசங்களிலிருந்து அரச படையினரின் பிரதேசத்துக்கோ கொழும்புக்கோ, செல்வதாயின் ஒரு நபருக்கு 5 பேரைப் புலிகளிடம் பணயம் வைத்தே செல்லவேண்டும். அவ்வாறு வெளியே செல்லும் நபர் திரும்பி வராவிட்டால் குறித்த பணயம் வைக்கப்பட்ட 5 நபர்களும் அவர்களுக்குரிய வீடு, சொத்துகள் அனைத்தும் புலிகள் இயக்கத்தால் கைப்பற்றப்படுவதாகவும் மேலும் வன்னித் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மேலும் பணயம் வைக்கப்பட்ட குறித்த நபர்கள் புலிகளின் முகாம்களிலும் புலிகளால் நடத்தப்படும் பண்ணைகளிலும் சேவை செய்வதற்காக அனுப்பப்படுவதாகவும் மேலும் வவுனியாவிற்கு வரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
லங்காதீப:11/05/2008