நியூயோர்க்:மியன்மாரில் ஏற்பட்ட சூறாவளி அனர்த்தத்திலிருந்து மீள்வதற்கான நிவாரண நடவடிக்கைகளை இராணுவ ஆட்சியாளர்கள் மிகவும் தாமதமாக மேற்கொள்வது தொடர்பில் ஐ.நா.பொதுச் செயலாளர் பான்.கீ.மூன் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
சூறாவளியிலிருந்து தப்பிய போதும் பசி மற்றும் தொற்றுநோய் போன்ற பாரிய அச்சுறுத்தல்களை எதிர் கொண்டுள்ள இலட்சக்கணக்கான மக்களில் மூன்றிலொரு பகுதியினரையே இந் நிவாரணப் பொருட்கள் சென்றடையக்கூடிய நிலை காணப்படுவதாக பான் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர் தான் ஸ்வேயுடன் பேசுவதற்கான வாய்ப்பு தனக்கு இதுவரை கிடைக்கவில்லை எனவும் பான் குறிப்பிட்டுள்ளார்.
பாரிய நகரங்களில் மீட்பு முயற்சிகளும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளும் முடிவடைந்துள்ள அதேவேளை பல நகரங்களில் இதுவரை மீட்பு முயற்சிகள் ஆரம்பிக்கப்படவில்லையென தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந் நகரங்களிலுள்ள மக்களுக்கான உதவிகள் விரைவில் அவர்களை சென்றடையாவிட்டால் அதிகளவானோர் பலியாகக் கூடுமென நிருபர்கள் அச்சம் தெரிவிக்கின்றன. சூறாவளியின் தாக்கத்திலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை இராணுவ ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள முடியாதளவுக்கு மந்த கதியில் மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டியுள்ள பான்!
நாம் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளோம். பாதிக்கப்பட்ட இடங்களை மிக விரைவாக உதவிகள் சென்றடையாவிடின் தொற்று நோய்கள் பரவும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும். முதலில் மக்களின் உயிர்வாழ்வைக் கவனத்தில் எடுக்கும்படி நான் பலதடவைகள் மியன்மார் அரசுக்கு அழைப்பு விடுத்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
பல நாட்கள் இடம்பெறற பேச்சுக்களின் பின்னர் நேற்று முன்தினம் நிவாரணப் பொருட்களடங்கிய அமெரிக்காவின் முதல் விமானம் கங்கூனை வந்தடைந்தது.
நுளம்பு வலை, போர்வைகள் மற்றும் குடிநீர் என்பவற்றை இவ் விமானம் காவி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நிலைமை சிறிது முன்னேற்றமடைந்துள்ளதாக தெரிவித்த ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைமையதிகாரி ஜோன் ஹோல்ம்ஸ் ஐ.நா.பணியாளர்களுக்காக 34 விசாக்களை வழங்குவதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.