டாக்கா: பங்களாதேஷின் வடக்குப் பகுதியில் வீசிய புயலின் போது படகொன்று கவிழ்ந்ததில் குறைந்தது 32 பேர் பலியாகியிருக்கலாமென அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
150 பயணிகளைக் காவிவந்த படகொன்றே தலைநகர் டாக்காவிலிருந்து 180 கி.மீ தொலைவிலுள்ள ஹொரவ் குறா ஆற்றில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
25 பயணிகள் நீந்திக் கரை சேர்ந்துள்ளதாகவும் ஏனையோர் படகில் அகப்பட்டிருக்கலாமென கருதப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அளவுக்கதிகமான மக்களை ஏற்றுவது, நீண்டகாலப் பாவனை மற்றும் பாதுகாப்பற்ற தன்மை என்பவற்றினால் பங்களாதேஷில் அடிக்கடி படகு விபத்துகள் இடம்பெறுவது வழக்கமாகும்.
இவ் விபத்தின் பின்னர் படகிலிருந்த 50 பேர் காணாமல் போயிருப்பதாக தெரிவித்துள்ள உள்ளூர் அதிகாரியொருவர் இதில் பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரியில் இடம்பெற்ற படகு விபத்தில் 39 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.