இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கின் அமைச்சர்கள் சமர்ப்பித்த இராஜிநாமாவை அந்நாட்டுப் பிரதமர் யூசுப் ரஸா கிலானி ஏற்க மறுத்துள்ளார். மற்றைய பிரதான கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவர் ஆஸிப் அலி சர்தாரி நாடு திரும்பும் வரை இவ் இராஜிநாமாவை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென கிலானி கூறியதாக அவரது உதவியாளரொருவர் தெரிவித்துள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த பொதுத் தேர்தல் நடைபெற்று 3 மாதங்களே ஆன நிலையில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் கட்சி அமைச்சர்கள் தமது இராஜிநாமாவை இஸ்லாமாபாத்திலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் வைத்து கிலானியிடம் கையளித்துள்ளனர்.
ஜனாதிபதி பர்வேஷ்ஷினால் கடந்த வருடம் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணிக்கமர்த்தும் விவகாரம் தொடர்பில் இரு முக்கிய கட்சிகளுக்குமிடையில் உடன்பாடொன்றை எட்ட முடியாமையினால் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதென நவாஸ் ஷெரீப் தீர்மானித்துள்ளார்.
நீதிபதிகள் அனைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டபோது இருந்த அதே அதிகாரத்துடன் மீண்டும் பணியில் அமர்த்தப்பட வேண்டுமென ஷெரீப் கோரும் அதேவேளை அவர்களின் அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பாகிஸ்தான் மக்கள் கட்சி விரும்புகிறது.
இதேவேளை, பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைமையிலான அரசாங்கத்திற்கு விடயங்களின் முக்கியத்துவத்தின் அடிப்படையில் தொடர்ந்து ஆதரவு வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள நவாஸ் ஷெரீப், தாங்கள் ஜனநாயக செயற்பாடுகளை சீர்குலைக்கும் எந்தவொரு சதி முயற்சிகளுக்கும் துணை போகமாட்டோமெனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், அரசாங்கத்திலிருந்து நவாஸ் ஷெரீப்பின் கட்சி வெளியேறுவது பாரிய பின்னடைவென்றும் இது ஸ்திரமற்ற நிலமை அதிகரிப்பதற்கு வழிவகுக்குமெனவும் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் ஆளும் கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள விரிசல் கடந்த தேர்தலில் படுதோல்வியடைந்த முஷாரப்பின் ஆதரவுக் கட்சிக்கு வாய்ப்பாக அமைந்துள்ளதாக நிருபர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, இவ்விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக கட்சியின் உயர்மட்டக் குழுவுடன் அவசர சந்திப்பொன்றை சர்தாரி நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.