* பசறை பிரதேச சபை உறுப்பினர் பத்மநாதன்
பசறை பிரதேச சபையின் உபதலைவரைப் பதவியிலிருந்து இடைநிறுத்த அல்லது மாற்றக்கூடிய அதிகாரம் ஊவா மாகாணசபை உறுப்பினருக்கு இல்லை. அந்த அதிகாரம் பிரதேசசபை உறுப்பினர்களுக்கும் கட்சிக்கும் மாத்திரமே இருக்கின்றது. இவ்வாறு பசறை பிரதேசசபை உறுப்பினர் செல்லையா பத்மநாதன் தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பசறை பிரதேசசபையின் உபதலைவருடைய காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் இதுபற்றிக் கருத்துத் தெரிவிக்கையில்; பசறை பிரதேசசபையின் உபதலைவர் டி.எம்.பிரேமதாஸ சாந்தவை பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு மாகாணசபை உறுப்பினரொருவர் ஊவா மாகாணசபையின் முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்துள்ள செய்தியொன்றை பத்திரிகையில் பார்த்து தெரிந்துகொண்டேன்.
மேற்குறிப்பிட்ட மாகாணசபை உறுப்பினருடைய தனிப்பட்ட விடயத்திற்காக பிரதேசசபையின் உபதலைவரைப் பதவியிலிருந்து இடைநிறுத்தவோ அல்லது விலக்கவோ முடியாது. அந்த அதிகாரம் இவருக்குக் கிடையாது. இவை பிரதேசசபைக்கும், உறுப்பினர்களுக்கும் தொடர்புடைய விடயமாகும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
உபதலைவர் டி.எம்.பிரமேதாஸ சாந்த இனபேதமின்றி பொதுநோக்குடன் சேவையாற்றக்கூடிய ஒருவர் என்பதை எவருமே மறுக்க மாட்டார்கள். தோட்டப் பகுதி மக்கள் இவருடைய சேவையைப் பெற்று பயனடைகின்றனர்.