*உறுதிபடக்கூறுகிறார் ஹிஸ்புல்லாஹ்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மட்டக்களப்பு மாவட்டத்தில் அமோக வெற்றியை ஈட்டியுள்ள அதேவேளை, கிழக்கு மாகாணத்தில் அதிக முஸ்லிம் உறுப்பினர்களையும் பெற்றுள்ளதால் அரசாங்கம் அளித்த உறுதியின் பிரகாரம் நானே முதலமைச்சராக தெரிவாவேன் என்று மாகாண சபைக்குத் தெரிவான முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் காத்தான்குடி முகைதீன் மெத்தைப் பள்ளிவாசலுக்கு முதன்முதலாக வருகைதந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அங்கு திரண்டிருந்த பெருந்திரளான மக்கள் மத்தியில் நன்றி தெரிவித்து உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் ஹிஸ்புல்லாஹ் தமதுரையில், பல்வேறு தியாகங்களுக்கு மத்தியில் அனைத்து காத்தான்குடி பிரதேச மக்கள் இரவு பகலாக பல்வேறு அசௌகரியங்கள் , இடர்கள் , தடைகளுக்கு மத்தியில் என்னைத் தெரிவு செய்துள்ளீர்கள் . முதலமைச்சர் பகற்கனவு என்று கூறியவர்களுக்கு இன்று நனவாக்க வழிசமைத்துள்ளீர்கள். அல்லாஹ் நீங்கள் நான் எண்ணியதை நனவாக்கியுள்ளான்.
இப்பதவி மூலம் தமிழ்- முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை புதிய பரிமாணத்துடன் கட்டியெழுப்ப நான் திடசங்கற்பம் பூண்டுள்ளேன்.
எமது தமிழ்- முஸ்லிம் ஒற்றுமையை சீர்குலைக்க ஒருபோதும் இடமளியேன். தமிழ் மக்களுக்கு நான் அமைச்சராக இருந்தபோது பல்வேறு அத்தியாவசிய பணிகளை மேற்கொண்டுள்ளேன். அவ்வாறே தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் கோரிக்கைகளை நியாயமான முறையில் வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.
முஸ்லிம்களாகிய நீங்களும் தமிழ் மக்களோடு எவ்வாறு இப்போது பரஸ்பரத்துடன் உறவாடுகின்றீர்களோ அதை மேலும் வலுவூட்ட வேண்டும்.
ஜனாதிபதி சொன்னதை செய்பவர். செய்வதைச் சொல்பவர். ஆகவே பெரும்பாலான ஆசனத்தைப் பெற்றுள்ள எனக்கு முதலமைச்சர் பதவியை இன்னும் ஓரிரு தினங்களில் கையளிப்பார் என்று எனக்குப் பூரண நம்பிக்கை உண்டு. இதைப்பற்றி அலட்ட வேண்டிய அவசியமில்லை.
எமது மாற்றுக்கட்சி சகோதரர்களும் எமது சகோதரர்களே . ஆகவே, அவர்கள் எமக்கு எதிரானவர்கள் என்று அவர்களுக்கோ அல்லது அவர்களின் உடைமைகளுக்கோ எவ்விதமான தீங்குகளையும் செய்யாது அவர்களையும் அரவணைத்துச் செல்லுமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன் என்றும் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.