அரசு எந்த வகையிலும் போர் நிறுத்தத்திற்கு தயாரில்லையென பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் உயிரிழந்த படையினரின் தாய் மாருக்கு நிதி உதவி வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள வீரத்தாய்மாரைப் பாதுகாப்போம் என்ற திட்டத்தின் 2ஆம் கட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இந் நிகழ்விலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில்;
தங்களுக்கு நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அழுத்தம் கொடுத்து யுத்தநிறுத்த உடன்பாட்டுக்கு வர விடுதலைப் புலிகள் முயன்றுள்ளதை வரலாறு சான்று பகர்கிறது.
ஆனால் தற்போதைய ஜனாதிபதி இப்பிரச்சனையை வேறொரு கோணத்தில் பார்க்கிறார். பயங்கரவாதத்தை பூண்டோடு அழிக்கும் தூரம் வெகு தூரத்திலில்லை. இதனால் படையினரை தனிமைப்படுத்தி விடாது அவர்களுக்கு வலுவூட்ட மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
புலிகள் விடயத்தில் அரசு தெளிவான தீர்மானமொன்றிலுள்ளது. என்ன நடந்தாலும் போர் நிறுத்த உடன்பாடொன்று எதிர்காலத்தில் கைச்சாத்திடப்படாதென்ற நிலைப்பாடே அதுவாகும். அதற்கு இடமளிக்கமுடியாது.
சிலவாரங்களுக்கு முன் ஒரு விடயத்தைக் கூறினேன். `அவர்குழிக்குள்' இருக்கிறார். அவர் குழிக்குள் இருப்பதாகக் கூறினேன். அந்தக் குழியை படையினர் மூடுவது வெகு தொலைவில் இல்லை. குழியின் நுனியிலிருந்தவர் தற்போது உள்ளே சென்றுவிட்டார்.
இன்று உலகில் தொழில் நுட்பம் அபி விருத்தியடைந்து விட்டது. மக்கள் வாழும் பிரதேசத்தில் பொது மக்களுக்கு சேதமேற்படாத வகையில் தேவையான இலக்கை நோக்கி தாக்குதல்களை நடத்தக் கூடிய குண்டுகள் தயாரிக்கப்பட்டு விட்டன. அந்தத் தொழில் நுட்பத்தை உயர் மட்டத்தில் அரசு பயன்படுத்துகிறது.
எங்கிருந்தாலும் தேடிவருவோம். இராணுவத்திற்கு நேரம் மட்டுமே தேவை. அப்பாவி மக்களைப் பலி கொள்ளும் யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.
சிறுவர்கள், தேரர்கள் அழிக்கப்படும் அத்தியாயம் முடிக்கப்பட வேண்டுமென்றார்.