*ஜாதிக ஹெல உறுமய அறிவிப்பு
-டிட்டோகுகன்-
கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானா அல்லது ஹிஸ்புல்லாவா என்பதில் தங்களுக்கு எந்தவொரு பிரச்சினையும் கிடையாதென தெரிவித்திருக்கும் ஜாதிக ஹெல உறுமய அந்த பதவிக்கு எவர் வந்தாலும் அதற்குரிய கடமைகளை சரியாக நிறைவேற்றி கிழக்கு மகாணத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சிங்கள மக்களை மீள குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
கிழக்கு மாகாணத்துக்கென சிறப்பாக பொலிஸ் மற்றும் காணி போன்ற அதிகாரங்கள் வழங்கப்படுமெனில் அதை தாங்கள் கடுமையாக எதிர்ப்பதாகவும் எனினும் அரசாங்கம் இது வரை அப்படியானதொரு யோசனை பற்றி தங்களிடம் பேசவில்லை என்றும் அக்கட்சி சுட்டிக் காட்டியுள்ளது.
கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள ஒமேகஇன் ஹோட்டலில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜாதிகஹெல உறுமயவினர் இவ்வாறான கருத்துக்களை வெளியிட்டனர்.
எல்லாவல மேதானந்த தேரர்
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய ஜாதிகஹெல உறுமயவின் தலைவரான எல்லாவல மேதானந்த தேரர் எம்.பி.கூறுகையில்;
இந்த தேர்தலின் போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டிணைந்து போட்டியிட்ட ரவூப்ஹக்கீம் கிழக்கில் முஸ்லிம் இனவாதத்தை தூண்டிவிட்டு செயற்பட்டார். முஸ்லிம்களும் சுயநிர்ணய உரிமை பற்றி சிந்திக்க வேண்டி ஏற்பட்டிருப்பதாக கூறி அவர் இனவாதத்தை கிளப்பியிருதார்.
அது மட்டுமல்லாது கஞ்சிக்குடிச்சாறு பகுதியிலிருந்து விடுதலைப் புலிகள் மூலம் எறிகணை வீச்சுக்களை நடத்தி பயங்கரவாத செயற்பாடுகள் மூலம் தேர்தலில் வெற்றியீட்ட முயற்சித்தனர். இவ்வாரெல்லாம் செயற்பட்டு விட்டு அரசின் மீது பொய்யான குற்றச் சாட்டுகளை சுமத்துகின்றனர். கிழக்கில் தமிழ் இனவாதத்தையோ அல்லது முஸ்லிம் இனவாதத்தையோ கிளப்பி விட நாம் அனுமதிக்கமாட்டோம்.
இதேநேரம் கிழக்கு மாகாண சபைக்கு பிள்ளையானா அல்லது ஹிஸ்புல்லாவா முதலமைச்சர் என்பது எமக்கு பிரச்சினையில்லை. அந்த பதவிக்கு எவர் வந்தாலும் அதற்குரிய கடமைகளை சரியாக செய்வதே முக்கியம்.
திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களுக்குரிய இடங்களில் வேறு ஆட்கள் குடியேற்றப்படுகின்றனர். 20 வருடங்களுக்கு மேலாக அங்கு வசித்துவரும் சிங்கள மக்களுக்கு இன்னும் இருப்பிட உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை. புலிகளினால் பெரும்பாலான சிங்கள மக்கள் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். ஜயந்திபுர, பொத்துவில் போன்ற பல பிரதேசங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே, விரட்டியடிக்கப்பட்ட சிங்கள மக்களை அவர்களுக்குரிய இடங்களில் மீள குடியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க
இதேநேரம், கட்சியின் கொள்கை வகுப்பாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க இங்கு கருத்துத் தெரிவிக்கையில் ;
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரச தரப்பு வெற்றி பெற ஜாதிக ஹெல உறுமய முக்கிய காரணியாக இருந்தது. இந்த தேர்தலானது பயங்கரவாதத்துக்கு கிடைத்த சிறந்த பதிலடியாகும். இதன் மூலம் பயங்கரவாதமும் தனித் தமிழீழ கனவும் வடக்கு- கிழக்கு மீளிணைப்பும் தோற்கடிக்கப்பட்டுள்ளன.
தேர்தலின்போது காண்காணிப்பாளர்களாக செயற்பட்ட சர்வதேச அமைப்புகள் சரியான தகவல்களை வெளியிட்டபோதும், உள்நாட்டு அமைப்புகள் உண்மைகளை கூறவில்லை. வாக்களிப்பின்போது புலிகள் நடத்திய மோட்டார் தாக்குதலை ஏன் தேர்தல் வன்முறையாக குறிப்பிடவில்லையென `பவ்ரல்' அமைப்பிடம் கேள்வி எழுப்புகிறோம்.
கிழக்கில் ஏற்படுத்திய ஜனநாயகத்தை அடுத்த வருடத்தில் வடக்கிலும் ஸ்தாபிக்க முடியுமென்றும் அது எமது படையினரால் முடியுமென்றும் நாம் நம்புகிறோம். இந்த வெற்றியானது படையினர் வடக்கையும் மீட்க பெரும் பலமாக அமையும்.
இதேநேரம், கிழக்கு மாகாணத்துக்கென சிறப்பாக பொலிஸ், காணி போன்ற அதிகாரங்களை வழங்குவதென்றால் அதை நாம் எதிர்க்கிறோம். மாகாணசபை முறைமையை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் பற்றி மட்டுமே சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் அறிக்கையில் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. அதற்கு மட்டுமே ஹெல உறுமய இணங்கியிருக்கிறது.
இருப்பினும், மேற்குறித்தது போன்றதொரு யோசனை பற்றி அரசாங்கம் எம்மிடம் பேசவுமில்லை. சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவிலும் அப்படியெதுவும் தெரிவிக்கவிக்கப்படவுமில்லை. அத்துடன், கிழக்கிற்கு மட்டும் அப்படியானதொரு விசேட அதிகாரங்கள் வழங்குவதற்கான எந்த அவசியங்களும் இருப்பதாக காண்பதற்குமில்லை. எனவே, அவ்வாறானதொரு யோசனை முன்வைக்கப்படும்போது அது பற்றி பேசிக்கொள்வோம் என்றார். இதேநேரம், ரணில் விக்கிரமசிங்கவும் ரவூப் ஹக்கீமும் வாக்களிப்பின்போது இடையூறு விளைவித்ததாகவும் அக்கரைப்பற்றில் `ஹக்கீமின் ஜிகாத் குழுவினர்' ஏனைய தரப்பினரை வாக்களிக்க இடமளிக்காமல் அடாவடித்தனத்தில் ஈடுபட்டபோதும், அரச தரப்பினர் மீது மட்டுமே அனைத்து குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படுவதாகவும் அமைச்சர் ரணவக்க சாடினார்.