* அரசுக்கு கடும் எச்சரிக்கை
கிழக்கு மாகாண முதலமைச்சராக ஹிஸ்புல்லாவை நியமிக்காவிட்டால் அமைச்சுப் பதவிகளிலிருந்து இராஜிநாமா செய்யப் போவதாக 12 முஸ்லிம் அமைச்சர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் வெற்றியீட்டிய 8 உறுப்பினர்களும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தால் இலகுவில் முஸ்லிம் முதலமைச்சரைப் பெற்றுக் கொள்ள முடியுமெனவும் அவர்கள் அரசாங்க உயர்தரப்புக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.
கிழக்குத் தேர்தலை விட கிழக்கின் முதலமைச்சர் யாரென்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருக்கும் நிலையில் கடந்த 72 மணித்தியாலங்களாக முதலமைச்சர் தெரிவு குறித்து இழுபறி நீடித்துள்ளது.
கிழக்கின் முதலமைச்சராக பிள்ளையானை நியமிக்க அரசாங்க உயர் மட்டமும் தமிழ்த் தேசிய ஜனநாயகக் கூட்டமைப்பும் சிங்கள கடும் போக்குக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவும் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனநேற்று செவ்வாய்க்கிழமையும் கிழக்கின் முதலமைச்சர் தொடர்பில் முக்கிய சந்திப்புகள் நடைபெற்றுள்ளன. ஆனால், எத்தகைய இறுதி முடிவுகளும் மேற்கொள்ளப்படாமல் இழுபறி நிலை நீடித்துள்ளது.
பிள்ளையான் முதலமைச்சராவதையே அரசாங்க உயர் வட்டாரங்களும் அமைச்சர்களும் விரும்புவதை அறிந்து கொண்ட முஸ்லிம் அமைச்சர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் கூடி நீண்ட நேரம் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
பிள்ளையான் முதலமைச்சராகுவதை ஒன்றுபட்டு எதிர்ப்பதெனவும் ஹிஸ்புல்லாவையே முதலமைச்சராக்க வேண்டுமெனவும் அவர்கள் தமக்கிடையே தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
அத்துடன், பிள்ளையான் முதலமைச்சரானால் தமதமைச்சுப் பதவிகளை உடனடியாக ராஜிநாமா செய்வதெனவும் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 8 மாகாண உறுப்பினர்களும் எதிர்க்கட்சியிலமர்ந்து ஒரு முஸ்லிமை முதலமைச்சராக்குவதெனவும் தீர்மானித்துள்ளதாக அறிய வருகின்றது.
இதேவேளை, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 12 முஸ்லிம் அமைச்சர்கள் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.
இக்கடிதத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் அதிகளவுக்கு தெரிவு செய்யப்பட்டால் முஸ்லிம் ஒருவரே முதலமைச்சராக நியமிக்கப்படுவாரென்ற ஜனாதிபதியின் வாக்குறுதியும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், ஹிஸ்புல்லா முதலமைச்சராக்கப்படவேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பதவிகளுக்காகவும் பட்டங்களுக்குமாகவே முஸ்லிம் அமைச்சர்கள் அரசாங்கத்துடன் ஒட்டியுள்ளனரென முஸ்லிம் காங்கிரஸ் குற்றம் சாட்டும் நிலையில் அமைச்சுப் பதவிகளை ராஜிநாமா செய்ய முஸ்லிம் அமைச்சர்களுக்கு துணிவுள்ளதாவென முஸ்லிம் அமைச்சரொருவரிடம் வினவிய போது, ஆம், அந்த துணிவு எங்களிடம் உள்ளது என்றார்.
இதேசமயம் கிழக்குத் தேர்தலில் ஆளும் தரப்பு சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற மட்டக்களப்பு முன்னாள் அரச அதிபர் மோன குரு சாமியை போனஸ் ஆசனம் மூலம் முதலமைச்சராக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், இதை உறுதிப்படுத்த முடியவில்லை.