*இரு நாட்டு உறவுகளும் பிரமாதம்; நியூயோர்க்கில் போகொல்லாகம
நியூயோர்க்: இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவு பலமானதாகவும் நேர்மையானதாகவும் வெளிப்படைத்தன்மையுடையதாகவும் இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம விடுதலைப் புலிகளின் ஆயுதக் கடத்தலை தடுப்பதற்காக இருநாடுகளும் மேற்கொண்ட கடல் வழி பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் கொழும்புக்கும் புதுடில்லிக்குமிடையிலான உறவுகள் மிக உயர்ந்த மட்டத்தில் இருப்பதாகக் கூறியிருக்கும் போகொல்லாகம இலங்கையின் தேவைகள் தொடர்பாக இந்திய தலைமைத்துவம் அளித்துவரும் பதில் நடவடிக்கைகள் குறித்து பாராட்டு தெரிவித்திருக்கின்றார்.
தற்போது நாங்கள் மிகவும் வலுவானதும் சிறப்பானதுமான உறவை கொண்டிருக்கின்றோம். எம்மிடையேயான நெருங்கிய உறவானது அரசியல், பொருளாதார அபிவிருத்திக்கு கணிசமான உந்து சக்தியை அளித்து வருகின்றது என்று பி.ரி.ஐக்கு செய்தி ஸ்தாபனத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை அளித்துள்ள பேட்டியில் அமைச்சர் போகொல்லாகம கூறியுள்ளார்.
பாக்கு நீரிணையிலும் இலங்கையை சூழவுள்ள கடற்பகுதியிலும் புலிகளின் ஆயுதக் கடத்தலைத் தடுப்பதற்கான இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான ஒருங்கிணைந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் தற்போதும் ஆயுதங்களைப் பெற்றுக்கொள்வதை ஏற்றுக்கொண்டிருக்கும் அவர், இந்திய இலங்கை ஏற்பாடுகளில் இல்லாத விடயங்கள் குறித்தே நாங்கள் கவனிக்கவேண்டியுள்ளது. புலிகள் எவ்வழிகளில் கொண்டு வருகிறார்கள் என்பதை பார்க்க வேண்டியிருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆயினும் புலிகளினால் மேற்கொள்ளப்படும் வன்செயல்களை அரசினால் கட்டுப்படுத்த முடிந்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பேட்டியில் அமைச்சர் போகொல்லாகம மேலும் தெரிவித்திருப்பதாவது;
நாட்டின் அரசியல் தேவைகள் தொடர்பாக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கிழக்கில் அண்மையில் இடம்பெற்ற தேர்தல் மூலம் இது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அடிமட்ட அதிகாரப்பகிர்வுக்கு இது வழிசெய்துள்ளது.
இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வு காண்பதிலேயே அரசு உறுதியாக உள்ளது. கிழக்கு மாகாணத்திற்கு அதிகாரப்பகிர்வு இடம்பெற்றுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலும் இதனை மேற்கொள்ள அரசு விரும்புகின்றது.
ஏனைய பயங்கரவாத அமைப்புகள் போன்றே உலகளாவிய ரீதியில் புலிகள் ஆயுதங்களைப் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால், எனக்குத் தெரிந்தவரை எந்தவொரு அரசாங்கமும் ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ள உதவவில்லை.
சட்டவிரோத ஆயுதங்களைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகளவு நிதி தேவையாகும். போதைப்பொருள் கடத்தல், கறுப்புப் பண பரிமாற்றம் , புலம்பெயர்ந்தவர்களிடமிருந்து பணம் திரட்டுதல் போன்றவற்றில் புலிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஆதலால் பயங்கரவாதத்தின் சகல வடிவங்களுக்கும் எதிராக நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தையை மேற்கொள்வதற்கான தேவையை நாம் நிராகரிக்கவில்லை. நாம் எப்போதுமே இதனை கூறியுள்ளோம். ஆனால், அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் புலிகள் செயற்பட முன்வரவேண்டும் . அவர்கள் எமது நாட்டுப் பிரஜைகள் . எம்முடன் பேச முடியாதென நாம் மறுக்க முடியாது.
அதேசமயம், ஒருவரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட மக்களின் விடுதலை தொடர்பாக அரசாங்கத்தால் விட்டுக் கொடுப்பை மேற்கொள்ள முடியாது. சகலருமே ஜனநாயகத்தை தழுவிக் கொள்ள வேண்டுமென்றே அரசு விரும்புகின்றது. கருணா குழு பொதுவோட்டத்தில் பிரவேசித்திருக்கின்றபோது ஏனையோரால் ஏன் முடியாது. வட, கிழக்குக்கு வெளியே 54 சதவீதமான தமிழர்கள் சிங்களவர்களுடன் வாழ்கின்றனர். பயங்கரவாதத்தை கையாழ்ள்வதே தற்போதைய ஒரே பிரச்சினையாகும் என்றும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்திருக்கிறார்.
ஜெனீவாவைத் தளமாகக் கொண்டியங்கும் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கை மீண்டும் உறுப்பினராவதற்கான ஆதரவை திரட்டுவதற்காக நியூயோர்க்கிற்கு சென்றிருக்கும் அமைச்சர் போகொல்லாகம, உறுப்பினராக இலங்கை தேர்ந்தெடுக்கப்படுமென நம்பிக்கையை வெளியிட்டுள்ளார். மனித உரிமை பேரவையில் இலங்கை உறுப்பினராவதற்கு மனித உரிமை அமைப்புகள் பல எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து கருத்துத் தெரிவித்த போகொல்லாகம, நலன்சார்ந்த நோக்கங்களின் அடிப்படையிலே எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.
மனித உரிமைகள் இலங்கை அரசியலமைப்பின் அங்கமாக இருப்பதாகவும் சகல மனித உரிமை தொடர்பான இணக்கப்பாடுகளுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் சிங்களவர்களும் தமிழர்களும் சமமாக நடத்தப்படுவதாகவும் இலங்கை ஒரு பல்லின பல்கலாசார நாடு என்றும் கூறியதுடன் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடினாலும் மனித உரிமைகளை பாதுகாப்பதில் இலங்கை அதிக கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.