* ஜனநாயகக் கட்சித் தலைவர்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு தீவிரமாக போராடிவரும் செனட்டர்களான பராக் ஒபாமாவும் ஹிலாரி கிளின்டனும் கட்சியின் ஒற்றுமையைக் கருத்திற்கொண்டு இக்களத்திலிருந்து எப்போது வெளியேற வேண்டுமென்பதை அவர்கள் அறிவார்களென ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஹவார்ட் டீன் தெரிவித்துள்ளார்.
செய்திச்சேவை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனைத் தெரிவித்துள்ள டீன், இவர்களுக்கிடையிலான நீண்டகால போராட்டம் எதிர்வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோன் மக்கெய்னை தோற்கடிப்பதற்கான வாய்ப்புகளைப் பாதிக்குமெனவும் எச்சரித்துள்ளார்.
மேலும், இப் போட்டிக்களத்திலிருந்து இவர்கள் வெளியேறுவதற்கான தருணம் இதுவாகவிருந்தால் அது அவர்களுக்கு தெரியும் . அத்துடன் இருவரில் ஒருவர் இக்களத்திலிருந்து வெளியேறுவார்கள். மக்களிடமிருந்து வரும் அழுத்தமோ அல்லது ஊடகங்களிடமிருந்து வரும் அழுத்தமோ அவர்களுக்கு தேவையற்றது. எப்போது இருக்கவேண்டும் எப்போது வெளியேற வேண்டுமென்பது அவரவருக்குத் தெரியும் .
எனது அனுபவத்தின்படி எவர் கூடுதலான பேராளர்களைப் பெற்றிருக்கின்றனரோ அதனடிப்படையில் விசேட பேராளர்கள் வேட்பாளரை முடிவு செய்வார்கள். ஆனால், எப்பொழுதும் இந்த நடைமுறைகளைத்தான் பின்பற்ற வேண்டுமென்பது இல்லை. முடிவுகளை எடுப்பதற்கான சுதந்திரம் வேட்பாளருக்குண்டு எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடகரோலினாவில் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஹிலாரி, தமக்கிருவருக்குமிடையில் நிலவும் தீவிர போட்டி வாக்காளர்களின் ஆர்வத்தை அதிகரிப்பதனால் இது ஜனநாயகக் கட்சிக்கு அனுகூலமாகவே அமையுமெனத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான அடுத்தகட்டத் தேர்தல்கள் எதிர்வரும் மே 6 இல் வடகரோலினா மற்றும் இன்டியானா மாநிலங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.