நான்கு முறை திருமணம் செய்து கொண்ட 60 வயதாகும் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தனக்கு திருமணத்தில் நம்பிக்கையில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பிறந்து பிரிட்டனில் வசிக்கும் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. உலகிலேயே சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படும் புக்கர் விருது பெற்றவர். இவர் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும் அந்த மதத்தை விமர்சித்து எழுதிய சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த புத்தகம் காரணமாக அவரது தலைக்கு விலை நிர்ணயித்து பட்வா எனப்படும் மத உத்தரவை ஈரான் மதத்தலைவர்கள் பிறப்பித்தனர்.
சிறிதுகாலம் தலைமறைவாக இருந்த அவர் ஈரான் மதத்தலைவர் ஆயத்துல்லா கொமெய்னி மரணம் அடைந்ததும் தைரியமாக நடமாடத் தொடங்கினார். 60 வயதாகும் இவர் 4 முறை திருமணம் செய்து கொண்டவர்.
4 ஆவது முறையாக அவர் சென்னையில் பிறந்த பத்மா லட்சுமியை திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு அவர்கள் பிரிந்து விட்டனர்.
இப்போது அவர் 5 ஆவது முறையாக தடகள வீராங்கனையாக இருந்து மாடலாக மாறிய 32 வயது அம்மி மூல்லின்ஸ் என்பவரை திருமணம் செய்யவுள்ளார்.
திருமணம் அவசியம் என்று நினைக்காத நான், 4 முறை திருமணம் செய்து கொண்டேன் என்பது வினோதமான ஒன்றாகும். திருமணத்தில் எனக்கு நம்பிக்கையும் கிடையாது என பத்திரிகையொன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது;
பெண்கள் அதிலும் குறிப்பாக ஏற்கனவே திருமணம் ஆகாத பெண்கள் திருமணத்தை அதிகம் விரும்புகிறார்கள் என்றால் அதற்கு காரணம் திருமண உடையை அணிந்து கொள்வதில் உள்ள ஆர்வம் தான். பெண்களுக்கு திருமணம் வேண்டும். ஆனால் திருமண வாழ்வை விரும்புவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.