பாகிஸ்தானில் பணிநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணிக்கமர்த்தும் விவகாரம் தொடர்பில் பாகிஸ்தானின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் டுபாயில் தொடர்ந்தும் பேச்சுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் மக்கள் கட்சி இணைத்தலைவர் ஆஸிப் அலி சர்தாரி மற்றும் முஸ்லிம் லீக் என் கட்சியின் தலைவர் நவாஸ் ஷெரிப் ஆகியோருக்கிடையிலான பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதும் சில சட்ட மற்றும் அரசியலமைப்பு விவகாரகங்களில் தொடர்ந்தும் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக அமைச்சரும் முஸ்லிம் லீக் என்னின் பாராளு மன்ற குழுத் தலைவர் நிசார் அலி கான் தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்று மாலையளவில் இதற்கான தீர்மானம் மேற் கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் நிசார் தெரிவித்தார்.
கடந்தாண்டு இறுதியில் அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி முஷாரப்பால் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணிக்கமர்த்துவதை மையமாகக் கொண்ட பேச்சுகள் நேற்று முன்தினம் டுபாயிலுள்ள ஹோட்டலொன்றில் ஆரம்பமாகின.
சுமார் 7 மணிநேரம் நடைபெற்ற பேச்சுகளின் பின்னர் உடன்படிக்கையொன்றை அடையும் முகமாக நடுவில் நவாஸ் ஷெரிப் நாடு திரும்புவதை பிற்போட்டிருப்பதாக நிசார் தெரிவித்தார்.
டுபாய்க்குப் புறப்படுவதற்கு முன்னர் கருத்துத் தெரிவித்த ஷெரிப் நீதிபதிகள் மீண்டும் பணிக்கமர்த்தப்படாவிட்டால் பாகிஸ்தானின் ஜனநாயகம் ஆபத்துகளை சந்திக்கவேண்டிய நிலை உருவாகுமென எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.