கிழக்கு மாகாணத்தை வடக்கு மாகாணத்திலிருந்து பிரித்தது சரியா? பிழையா? என்பதை இந்தத் தேர்தல் மூலம் நீங்கள் நிர்ணயிக்கப்போகிறீர்கள். கிழக்கை நிபந்தனையோடுதான் பிரிக்கவேண்டும். அந்த நிபந்தனை முஸ்லிம்களுக்குரிய முஸ்லிம் மாகாணத்தை நிர்ணயித்துவிட்டுத்தான் நடைபெற்றிருக்கவேண்டும். இவ்வாறு இறக்காமத்தில் பெருந்திரளான ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மத்தியில் இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் சலீம் தலைமையில் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர்நாயகமும் அம்பாறை மாவட்ட முதன்மை வேட்பாளருமான ஹசன் அலி உரையாற்றும்போது குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றும்போது;
இந்தத் தேர்தலில் அரசாங்கம் வெற்றிபெற்றுவிட்டால் அடக்குமுறையை ஏற்றுக்கொண்டு முஸ்லிம் மாகாணம் தராமலேயே கிழக்கைப் பிரித்ததை ஏற்றுக்கொண்டுவிட்டோம். தமிழ் பேசும் மக்களின் எல்லைப்புறக் காணிகள் பறிக்கப்பட்டு விடுவதை ஏற்றுக்கொண்டுவிட்டோம். பேரினவாதிகளால் அமுல்படுத்தப்பட்டுவருகின்ற திட்டமிட்ட குடியேற்றங்களை ஏற்றுக்கொண்டுவிட்டோம். கிழக்கு மாகாணத்துக்கென அறிமுகப்படுத்தப்பட்ட கொடியினையும் அதில் முஸ்லிம்களும் முஸ்லிம்கள் பெரும்பான்யைாக வாழ்கின்ற திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களின் சின்னங்கள் எமது பிரதிநிதித்துவத்தை நிராகரிப்பதையும் ஏற்றுக்கொண்டுவிட்டோம் என்றுதான் அர்த்தமாகிறது.
ஆகவே, அரசாங்கத்தை எப்படியாவது தோற்கடிக்கவேண்டிய பாரிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெறும்போது எமக்கான மாகாணத்தை நீங்கள் உருவாக்கிவீட்டீர்கள். கிழக்கு மாகாணத்துக்கான கொடியில் எமது இலச்சினை பொறிக்கப்படும். பறிபோன எல்லைக்கிராமங்களின் காணிகள் மீட்கப்படும். திட்டமிட்ட பேரினவாதக் குடியேற்றங்கள் தடுத்துநிறுத்தப்படும். ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதற்காகத்தான் போராடி வருகிறது.
இந்தத் தேர்தல் ஒரு புனித யுத்தத்திற்குச் சமமானது. நாங்கள் எங்கள் உரிமைகளைப் பெற்று பாதுகாப்புடன் வாழப்போவதை உறுதிப்படுத்துகின்ற பெருங்கடமை உங்களுக்கு இருக்கிறது. எமது மண்ணை மீட்கப்போகின்ற ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பம் எமக்குக் கிடைத்துள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் எதிரிகளுக்கு வழங்கிவிட்டோமானால் அனைத்தையுமே இழக்கவேண்டிய ஒரு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.
இந்தப் போராட்டத்திலிருந்து நீங்கள் தப்பித்துக்கொள்ள வேண்டுமானால் சமூகப்பற்றும் பாதுகாப்பும் உங்களுக்குத் தேவையானால் எமது மண் உங்களுக்குச் சொந்தமாக இருக்கவேண்டுமானால், எமது கிழக்கு எமக்கே கிடைக்கவேண்டுமானால், பாரிய அழிவுகளிலிருந்து நீங்கள் விடுபடவேண்டுமானால், தமிழ் பேசும் மக்கள் ஒற்றுமையாகவும் ஒரே குடும்பமாகவும் வாழவேண்டுமானால், ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யவேண்டும்.
இந்த வெற்றியின் மூலமாகத்தான் பேரினவாதிகளுக்கு நாங்கள் பாடம் புகட்டவேண்டும். பேரினவாதிகளுக்குத் துணைபோகின்ற முஸ்லிம் அமைச்சர்களுக்கும் நல்ல பாடம் புகட்டவேண்டும். எங்களுக்குரிய முஸ்லிம் மாகாணத்தை எங்களுக்குத் தராமல் நாங்கள் இந்தத் தேர்தலைக் கேட்காமல் அரசாங்கம் தேர்தலைக் கொண்டுவந்திருக்கிறது. இது அரசாங்கத்தின் பாரிய சூழ்ச்சி என்பதை வாக்காளப் பெரும்மக்கள் புரியவேண்டும்.
எதிரிகளை விரட்டும் ஆயுதங்களாக உங்கள் வாக்குகளை நீங்கள் பிரகடனப்படுத்துங்கள். மே 10 உங்களுக்குப் பெருநாளாக இருக்கவேண்டும். கிழக்கு எமது ஜெருசலம். அதை மீட்கும் திருநாளாக மே 10 திகழ வேண்டும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மகா சக்தியை நீங்கள் உலகுக்குக் காட்டவேண்டும். பறிபோன எமது புன்னகையை நீங்கள் மீண்டும் நிலைக்கச் செய்யவேண்டும். எமது தலைவர் அஷ்ரப்பின் கனவை நனவாக்குகின்ற நிகழ்வை நீங்கள் இந்தத் தேர்தல் மூலம் நிகழ்த்திக்காட்ட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.