* சபுகஸ்கந்தையில் ஜனாதிபதி ராஜபக்ஷ
எம்.ஏ.எம்.நிலாம்
ஒரு இனத்தை மற்றொரு இனம் பணயக்கைதியாக வைத்திருப்பதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லையெனத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இலங்கையில் முஸ்லிம்கள் பயங்கரவாதிகளால் எதிர்கொண்ட அழிவுகள் என்றுமே மறக்கப்பட முடியாதவை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சப்புகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நவீனமயப்படுத்தும் திட்டத்தை ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நிஜாத்துடன் இணைந்து ஆரம்பித்து வைத்த பின்னர் அங்கு நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;
கிறிஸ்து வருடம் 225 முதலே இலங்கைக்கும் ஈரானுக்கு (பாரசீகம்)மிடையில் உறவுகள் கட்டியெழுப்பப்பட்டுள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வர்த்தக உறவுகளும் காணப்பட்டன. அதற்குச் சான்றாக பாரசீக நாணயங்கள் எம்மிடம் இன்றும் பாதுகாப்பாக உள்ளன. இலங்கை மக்கள் பணம், பொருளைவிட நட்புறவையே மேலாகக் கருதுகின்றனர். ஈரான் மக்கள் காட்டும் அன்பு, பரிவு, கருணை, புரிந்துணர்வு என்பன எம்மை உங்களுடன் இறுக்கமாக இணைத்து வைத்துள்ளது.
உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் யுத்தம் காரணமாக பெரும் இழப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர். பலஸ்தீன- இஸ்ரேல் யுத்தம் போன்று வேறு பல நாடுகளிலும் இடம்பெறும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் காரணமாக இலட்சக்கணக்கான முஸ்லிம் மக்கள் அகதிகளாக்கப்பட்டு முகாம்களில் முடக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை முஸ்லிம்கள் அனுபவிக்கும் துயரங்கள் போன்று உலகில் எங்கும் காணமுடியாது. அந்தளவுக்கு வேதனை நிறைந்தவை அவை. காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அப்பாவி முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 24 மணி நேரத்துக்கிடையில் உடுத்த உடையுடன் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் வடக்கிலிருந்து விரட்டப்பட்டனர். இவற்றையெல்லாம் எம்மால் என்றுமே மறக்கமுடியாது.
வடக்கிலிருந்து அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்களும் கிழக்கு முஸ்லிம்களும் இந்த நாட்டில் தலைநிமிர்ந்து ஏனைய இனங்களுடன் சமமாக வாழும் சூழ்நிலையை நிச்சயம் உருவாக்குவோம்.
எமது நாட்டின் அபிவிருத்திக்காக ஈரான் வழங்கும் உதவி, ஒத்துழைப்புகளை இலங்கை மக்கள் சதாகாலமும் நினைவில் வைத்திருப்பார்கள். இலங்கையர்கள் நன்றி மறந்தவர்களாக இருக்கமாட்டார்கள். உங்கள் முயற்சிக்கு நாம் கைகொடுத்துதவுவோம் என்று குறிப்பிட்டார்.