* முறியடிக்க நாளை முதல் போராட்டம்; ஜே.வி.பி. தெரிவிப்பு
ரொஷான்நாகலிங்கம்
ஈழக் கோரிக்கை, நிதி மோசடியென்ற இரு பயங்கரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் போராட்டத்தை நாளை முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி.)நேற்று தெரிவித்தது.
கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஜே.வி.பி.யின் மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அக்கட்சி எம்.பி.லால்காந்த, ஆட்சியாளருக்கு ஏற்புடையதாகவே அரசியலமைப்பு உள்ளதாகவும் சட்டங்களும் அவர்களுக்கு இசைவாகவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியதுடன், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை கட்டுப்படுத்த அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் சாடினார்.
அவர் தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது;
அதிகார வர்க்கத்திற்கு எதிராக தொழிலாளர்கள் வீதியில் இறங்கிப் போராடியதையடுத்தே வேலை நேரம் 8மணி நேரமாகக் குறைக்கப்பட்டது.
உலகக் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட இந்தப் போராட்டத்தில் பலர் பலியாகிய போதிலும் தொழிலாளர் உரிமைகள் வென்றெடுக்கப்பட்ட இன்றைய தினம் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
பயங்கரவதாதத்தை ஒழிப்பதற்காகவே இன்றைய ஆட்சியாளர்களுக்கு பொதுமக்கள் ஆதரவு வழங்கியதுடன் பொறுமைகாத்தும் வருகின்றனர். எனினும் வாழ்கைச்செலவு என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது.
வாழ்ச்சைச்செலவுப் புள்ளி மிக மோசமாக அதிகரித்துள்ளது. ஆனால் இது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அரசாங்கம் மௌனமாகவிருக்கின்றது.
எமது நாட்டுக்கு எதிராக எந்தவொரு சதிநடவடிக்கைகளையும் எதிர்ப்பதற்கு ஜே.வி.பி.ஒரு போதும் தயங்கியதில்லை.
இன்று நாம் இரண்டு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக முகம் கொடுக்க வேண்டியுள்ளது. ஒன்று ஈழப்போருக்கு எதிரான புலிகளின் பயங்கரவாதம் மற்றையது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் நிதிமோசடியாகும்.
இந்த இரண்டு பயங்கரவாத நடவடிக்கைகளையும் தோற்கடிப்பதற்கு நாளை முதல் அனைத்துத் தொழிலாளர்களையும் இணைத்து போராட்டங்களை நடத்தவுள்ளோம்.
பொது மக்களை வாட்டி வதைக்கும் வாழ்க்கைச்செலவு அதிகரிப்பிற்கு எதிராக உடனடியாக நடவடிக்கையெடுக்கப்படாவிட்டால் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.