* மூதூர் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பாயிஸ்
அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவை வாபஸ்பெற்றுக் கொண்டு, எதிரணியினருடன் இணைந்து அரசியல் செய்வதன் மூலம் எமது முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்கவோ அன்றி வென்றெடுக்கவோ முடியாது என, கால்நடை வள பிரதி அமைச்சர் கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள கால்நடை வள அபிவிருத்தி பிரதி அமைச்சர் அண்மையில் மூதூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்த போது அங்கு நடைபெற்ற கூட்டத்தில் கருத்து தெரிவித்த போதே இதனைத் தெரிவித்தார்.
பிரதி அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;
கிழக்கு மாகாணம் கடந்த பல வருட காலமாக அபிவிருத்தி காணாது யுத்த சூழல் நிறைந்த மாகாணமாக மாறியதால் மக்கள் தமது உறவுகளை இழந்து, உடைமைகளை இழந்து, தொழில் இழந்து, கல்வி இழந்து மிகவும் மோசமான நிலையில் வாழ்வா, சாவா என்று தெரியாமல் போராடிக் கொண்டிருந்த காலத்தை நாம் மறக்க முடியாது.
இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் யுத்த சூழல் நிலவிய போதிலும் கிழக்கின் உதயம் என்ற பேரில் மக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து இன்று கிழக்கு மாகாண ஒட்டுமொத்த சமூகமும் நிம்மதிப் பெருமூச்சு விடுமளவிற்கு நிலைமை முன்னேறியுள்ளது.
மூதூர் மக்களின் அடிப்படைத் தேவை என்பது பலவாறாக இருந்த போதிலும் மிக முக்கியமாக பாதுகாப்பு, மீன்பிடித் தொழில் தடை நீக்கம் என்பவற்றை இன்று இந்த அரசாங்கம் தீர்த்து வைத்துள்ளது. கடந்த 25 வருட காலமாக நடைபெற்று வரும் இந்த யுத்தம் இன்னும் தொடர்ந்தால் அடுத்துவரும் சந்ததியினருக்கு இந்த நாட்டில், இந்த மண்ணில் நாம் எதனை விட்டுவிட்டு செல்லப் போகிறோம்? கிழக்கு மாகாண முஸ்லிம்களை நிம்மதியாக வைக்க வேண்டிய தார்மிகப் பொறுப்பு முஸ்லிம்களின் தேசிய அரசியல் கட்சியான ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையே சாரும்.
முஸ்லிம் காங்கிரஸ் என்ற ஸ்தாபனத்தை ஸ்தாபக தலைவர் அஷ்ரப்பின் இலட்சியம், கனவு எல்லாமே இந்த மண்ணின் முஸ்லிம்கள் சுய உரிமையுடன் நிம்மதியாக வாழவேண்டும் என்பது தான். இதனை நாம் அடையும் காலம் மிகத் தூரமில்லை. பெருந்தலைவர் அஷ்ரப்பின் கனவை நனவாக்கும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் எம்முன் வந்துள்ளது.
முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை நாம் பெற்றுக் கொள்வதன் மூலம் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் சுய நிர்ணயம், சுய கௌரவம், நிம்மதி, பாதுகாப்பு, ஜனநாயகம் இவையனைத்தும் பாதுகாக்கப்படும். வெறுமனே அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்டு எதிரணி வரிசையில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்வதன் மூலம் இந்த நாட்டின் முஸ்லிம்களை பாதுகாக்கவும், உரிமைகளை வென்றெடுக்கவும் ஒரு போதும் முடியாது.
பெருந்தலைவர் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை உருவாக்கியது அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுவதற்கல்ல. அரசாங்கத்திலேயே இருந்து கொண்டு போராடியும், அரசியல் பேரம்பேசியும் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்றெடுக்கத் தான் அவர் அரசியல் செய்து வந்தார். எனவேதான் நாம் அரசாங்கத்தையும், ஜனாதிபதியையும் விமர்சித்துக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்புவதன் மூலம் நடக்கப் போவது ஒன்றுமில்லை.
இக்கூட்டத்தில் மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.