* பஷீர் சேகுதாவூத்
முதலமைச்சராவோம்!... என்று ஊரூராகச் சொல்லிக்கொண்டு தமிழ் - முஸ்லிம் இனவாதத்தை இம்மாகாணம் முழுவதும் விதைக்க முஸ்லிம் காங்கிரஸ் முட்டாள்களின் கட்சியல்ல என்று ஐ.தே.க. முதன்மை வேட்பாளரும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
மாகாணசபை தேர்தலில் ஐ.தே.க. வேட்பாளர்களை ஆதரித்து ஏறாவூரில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் பஷீர் சேகுதாவூத் அங்கு உரையாற்றுகையில்;
"கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராயவோ அவை தொடர்பாக கலந்துரையாடவோ இந்த அரசாங்கத்திற்கு கிஞ்சித்தும் அக்கறையில்லை. அவர்களின் நோக்கமெல்லாம் முஸ்லிம்களின் அரசியற் பலமாக விளங்கும் ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அரசாங்கத்துடன் சேர்த்துவைத்துக்கொண்டு ஏனைய முஸ்லிம் அமைச்சர்களைப் போல ஊமைகளாக இருக்கச் செய்ய வேண்டும். அல்லது அந்தக் கட்சியை இல்லாமலாக்கிவிட வேண்டும். அத்துடன், கிழக்கில் அரசின் செல்வாக்கைத் தக்கவைக்க பிள்ளையான் தலைமையிலான ரி.எம்.வி.யை அரவணைத்துக் கொள்ள வேண்டுமென்பதுதான்.
நாங்களும் அரசாங்கத்துடன் இருந்து முஸ்லிம்களின் பிரச்சினைகளை எடுத்துக்கூறி தீர்வைக் காணலாம் என பலமுறை முயற்சிகள் செய்து பார்த்துவிட்டுத்தான், இந்த அரசாங்கத்தை கைகழுவி விட்டு வெளியேறினோம். எமது வெளியேற்றத்திற்கு பிறகு அரசு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளை பகிரங்கமாகவே அரவணைத்துக்கொண்டு உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டது.
அப்போதெல்லாம் பிரசார மேடைகளிலும் கருத்தரங்குகளிலும் அரசாங்கத்தையும், பிள்ளையான் குழுவினரையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தவர்களெல்லாம் இப்போது முதலமைச்சர் பதவியைப் பெறுவதற்காக அரசாங்கத்தைப் புகழ்ந்தும் மகிந்த சிந்தனையைப் பாராட்டியும் பேசிவருகிறார்கள்.
இவர்களின் முதலமைச்சர் கனவு எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி தேர்தல் முடிவு வெளியானதும் கலைவதுடன், ஐக்கிய தேசியக்கட்சி இம் மாகாணத்தில் வாழும் தமிழ் - சிங்கள - முஸ்லிம் மக்களின் அதிகப்படியான வாக்குப்பலத்தை பெற்று 20 உறுப்பினர்களுடன் அமைக்கவுள்ள கிழக்கு மாகாண சபைக்கு அவர்கள் உறுப்பினர்களாக வந்தாலும் எமது சமூகத்தில் விழிப்பார்களா என்பது சந்தேகத்துக்குரியதே" என்று தெரிவித்தார்.