* ரணில் குற்றச்சாட்டு; `கொச்சைப்படுத்தப்பட்டிருக்கும் ஜனநாயகம்'
எம்.ஏ.எம்.நிலாம்
ஜனநாயக அரசியல் இன்று முற்றுமுழுதாக கொச்சைப்படுத்தப்பட்டும் பணத்துக்கும், அதிகாரத்துக்கும் அடிபணிந்து அவலத்துக்குள் தள்ளப்பட்டிருப்பதாக விசனம் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வடக்கையும், கிழக்கையும் வைத்து அரசியல் நடத்தும் தென்னிலங்கை அரசியல் சக்திகள் நாட்டை தவறான பாதையில் இட்டுச் சென்று கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
அன்று மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா.விலும் சர்வதேச தொழிலாளர் மாநாட்டிலும் குரல் எழுப்பியவர்கள் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றனர் எனவும் ரணில் கேள்வி எழுப்பினார்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 15 ஆவது சிரார்த்த தின வைபவத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கொழும்பு ஹல்ஸ்ரொப் உயர் நீதிமன்றத்துக்கு முன்பாக அமரர் பிரேமதாஸ சிலைக்கருகில் சுச்சரித்த அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சிரார்த்த தின நிகழ்ச்சியில் ஹேமா பிரேமதாஸ, மகன் சஜித் பிரேமதாஸ, மகள் துலாஞ்சலி ஜயக்கொடி உள்ளிட்ட குடும்பத்தினரும் சபாநாயகர் லொக்குபண்டார, ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி உயர் மட்டத்தினர் பலரும் கலந்துகொண்டனர்.
பிரேமதாஸவின் உருவச்சிலைக்கு கொழும்பு மாநகர முதல்வர் இம்தியாஸ் உவைஸ் மலர் மாலை அணிவித்தார். அதன்பின்னர் ஹேமா பிரேமதாஸ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார மற்றும் பிரேமதாஸவின் குடும்பத்தினர் மலரஞ்சலி செலுத்தினர். அடுத்து இரண்டு நிமிட நேர மௌன அஞ்சலியும் பொலிஸ் மற்றும் முப் படையினரின் பாண்ட் வாத்தியக் குழுவின் சோக கீதமும் இடம்பெற்றது.
பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயக்குரவர்களின் பிரார்த்தனை நிகழ்ச்சிகளையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார்.
அவர் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது;
ரணசிங்க பிரேமதாஸவை இன்று நிறையப்பேர் மறந்துவிட்டனர். இதில் புதுமை என்னவெனில் ஊடகங்கள் கூட மறந்து போனது தான். நாட்டிலுள்ள ஊடகங்களில் நான்கு சிங்களப் பத்திரிகைகளும் மூன்று ஆங்கிலப் பத்திரிகைகளும் மட்டுமே அவரைக் கொஞ்சம் நினைவூட்டி இருக்கின்றன. அதுகூட ஒப்பாசாரத்துக்குப் போலவே காணப்படுகின்றன.
நாட்டில் இலட்சக்கணக்கில் வீடு கட்டியவரை, 200க்கும் மேற்பட்ட ஆடைத் தொழிற்சாலைகளை நிறுவி வேலைவாய்ப்பு வழங்கிய வரை, தொழில் வாய்ப்புகளை உருவாக்கியவரை 15 வருடங்களுக்குள் மக்களால் எப்படி மறக்க முடிந்தது எனக் கேட்க விரும்புகின்றேன். எமது நாட்டு மக்களின் மனித நேயப்பண்பாடு இதுதானா? அதிகாரத்திலிருப்பவர்களின் மாமன், மாமி மரணித்தால்கூட ஊடகங்கள் மூலம் பெரிதாக விளம்பரம் போட்டு பக்க வாத்தியம் வாசிப்பவர்களாக இருப்பவர்கள் இன்று பிரேமதாஸவை மறந்துவிட்டனர்.
ஜனநாயகத்தை அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்கு பிரேமதாஸ அளப்பெரும் பங்களிப்புச் செய்தவர். அரசியல் எதிரணியினரைக் கூட தமது அன்பு வழியால் அரவணைத்தவர். வளம்மிக்க, சுதந்திரமானதொரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக தமது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்தவர்.
1982 காலப்பகுதியில் தெற்கும், வடக்கும் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அக்காலகட்டத்தில் தைரியமாக நின்று அரசாங்கத்தை பாதுகாத்தவர். அக்காலகட்டத்தில் பிரேமதாஸ அரசியலில் இருக்காவிட்டால் எமது நாடு இன்று சோமாலியாவாக மாறியிருக்கும். ஒரு நாளிரவு தொலைக்காட்சி அறிவிப்பைச் சொல்லக்கூட ஆளில்லாத நிலை ஏற்பட்டபோது தைரியமாக நின்று சிறிதளவு ஆங்கிலம் தெரிந்த யுவதியை பயன்படுத்தி நாட்டின் நிலைமையை நாட்டுக்கு எடுத்துக்கூற வைத்தார்.
பிரேமதாஸவை தமிழரின் எதிரி என்றும் ஜே.வி.பி.யின் எதிரி என்றும் அன்று விமர்சித்தனர். ஆனால், அதற்கு அளித்த பதில் தான் மக்களின் சேவகன் யாருக்கும் எதிரியல்லவென்பதுதான். அன்றும்கூட அவர் யுத்தத்தை விரும்பவில்லை. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டிய அவசியத்தையே அவர் வலியுறுத்தி வந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி இன்றும் கூட யுத்தத்தை விரும்பவில்லை. யுத்தம் காரணமாக நாடு மோசமான அழிவுக்குள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றது. சமாதானப் பேச்சுக்கள் மூலம் அரசியல் தீர்வொன்றை எட்டுவதற்கே எமது கட்சி முன்னுரிமை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த விடயத்தில் பலத்த சவாலை எதிர்கொள்ளலாம். அந்தச் சவாலை எதிர்கொண்டு அரசியல் தீர்வுக்குச் செல்லும் வழியை நாம் தேடியே ஆக வேண்டும்.
வடக்கையும், கிழக்கையும் வைத்து அரசியல் நடத்தும் சக்திகள் நாட்டையும், மக்களையும் தவறான திசையில் இட்டுச் செல்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கத் தவறினால் நாடு மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இன்று ஜனநாயகத்துக்குப் பெரும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாம் ஒன்றுபட்டு ஜனநாயகத்தைப் பாதுகாக்கத் தவறினால் அதன் பின்விளைவுகள் கவலை தரக்கூடியவையாகவே அமையலாம்.
இலங்கையில் இன்று மனித உரிமைகள் மிக மோசமாக மீறப்படுவதாக முழு உலகமுமே குற்றவிரல் நீட்டுகின்றன. இதில் புதுமை என்ன வெனில் பிரேமதாஸ ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் இங்கு மனித உரிமை மீறல்கள் காணப்படுவதாக சிலர் ஐ.நா.விலும், மனித உரிமைகள் ஆணைக் குழுவிடமும் சர்வதேச தொழிலாளர் மாநாட்டிலும் குரல் எழுப்பினார்கள். இன்று நாட்டை ஆள்பவர்கள் தான் அன்று அவ்வாறு பேசினர். இன்று அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர். இன்று ஊடக சுதந்திரம் பேணப்படுகின்றதா, ஆட்கடத்தல்கள், படுகொலைகள், காணாமல் போதல் கணக்கிலடங்கவில்லை. இவற்றுக்கு முடிவு கட்டமுடியவில்லை. ஊடகங்கள் பேசத்தயக்கம் காட்டுகின்றன. வாய் திறந்தால் கடத்தப்படுவர். காணாமல் போவர். அல்லது தாக்கப்படுவார்கள்.
ஆனால், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சி எந்தச் சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்கின்றது. எத்தகைய நெருக்கடிக்கும் நாம் முகம் கொடுக்க பின்நிற்க மாட்டோம் என்பதை பிரேமதாஸவின் 15 ஆவது நினைவுதினத்தில் உறுதியளிக்கின்றேன்.
நிகழ்வில் பாராளுமன்ற சபாநாயகர் லொக்குபண்டார, சுச்சரித்த இயக்கச் செயலாளர் விஜித இதிரகொன்ன, பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ ஆகியோரும் பேசினர்.