* நாடுகள் பற்றிய அறிக்கையில் அமெரிக்கா
இலங்கையில் மோதல் அதிகரித்ததால் கடந்த வருடம் 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதுடன் பல்லாயிரக் கணக்கானோர் இடம் பெயர்ந்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இலங்கையில் 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று முன் தினம் புதன்கிழமை அறிகையொன்றை விடுத்துள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
ஆண்டின் நடுப்பகுதியில் கிழக்கு மாகாணத்தை இலங்கை அரசாங்கம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. ஆனால், புலிகள் வடக்கில் அதிகமான பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன் நாடளாவிய ரீதியில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். நடளாவிய ரீதியில் தனது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் இராணுவம் நிலை கொண்டுள்ளது. கிழக்கிலும் மேற்கின் கேந்திரப் பகுதிகளிலும் விஷேட அதிரடிப் படை பொலிஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஆண்டு முழுவதும் அரச படையினரும் புலிகளும் பதில் தாக்குதல்களை மேற்கொண்டனர்.நவம்பர் 28 இல் விடுதலைப் புலிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை படுகொலை செய்ய தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டனர். அதே தினம் பொதியில் வைக்கப்பட்ட குண்டால் கொழும்பில் 19 பேர் கொல்லப்பட்டனர். இதில் புலிகள் சம்பந்தப்பட்டிருப்பதாக காணப்பட்டாலும் புலிகளிலும் பார்க்க குற்றச் செயல்களில் தொடர்புடையோர் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாமென பொது மக்கள் தரப்பில் ஊகம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏனைய பாரிய தாக்குதல்களாக அநுராத
புரம் விமானப் படைத்தளம் மீதான தாக்குதல், கொழும்பில் எரிவாயு குதம் மீதான தாக்குதல் (மார்ச்சில்) இடம்பெற்றுள்ளன. இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த தாக்குதல்களுக்கு எதிரான பதில் நடவடிக்கைகளாகவே இந்தத் தாககுதல்களில் பல தென்படுகின்றன. அதாவது பஸ்கள், கிராமங்கள் மற்றும் நவம்பர் 2 இல் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வன் கொல்லப்பட்டமை தொடர்பான தாக்குதல்களுக்கான பதில் நடவடிக்கைகளாக இவை காணப்படுகின்றன.
இதேவேளை, புலிகளிடமிருந்து பிரிந்து சென்ற கருணா அணியானது நீதி விசாரணைக்கு புறம்பான படுகொலைகள், புலிகளுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் புலிகளுக்கு ஆதரவான பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்கு பொறுப்பாக உள்ளது. இதன் முன்னாள் தலைவர் கருணா அம்மான் குடிவரவு விவகாரத்தில் மோசடி செய்த குற்றச்சாட்டில் லண்டனில் கைதாகியுள்ளார். கருணா அணியின் கட்டுப்பாட்டை பிள்ளையான் எடுத்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தை அரசு கட்டுப்பாட்டில் கடந்த காலங்களில் எடுத்த போதும் அதிகாரப் பகிர்வு, பொருளாதார அபிவிருத்தித் திட்டங்கள் என்பனவற்றை முன்னெடுக்க முடியாமலுள்ளது. ஏனெனில் ஆளும் கூட்டணியில் ஸ்திரத்தன்மை இல்லாததே இதற்கு காரணமாகும்.
வடக்கில் அதிக பகுதிகளை தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கும் புலிகள், நாடளாவிய ரீதியில் தாக்குதல்களை அதிகரிக்கக் கூடியவர்களாக உள்ளனர். அதேசமயம் நவம்பர், டிசம்பரில் வடக்கில் படையினர் தாக்குதல்களை அதிகரித்திருந்தனர்.
வட அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா நாடுகளிலுள்ள புலம் பெயர்ந்த தமிழர்களிடம் தொடர்ந்தும் நிதிப்பங்களிப்பை புலிகள் பெற்று வருகின்றனர். அத்துடன், தமது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் உள்ளூர் வரிகளை அறவிடுகின்றனர். அத்துடன், தமிழ் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நிதி சேகரிப்புக்கு புலிகள் பயன்படுத்துகின்றனர். நவம்பரில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் சொத்துகளை அமெரிக்கா முடக்கியது. இவ்வாறு திரட்டப்பட்ட நிதியை சர்வதேச கறுப்புச் சந்தையில் ஆயுதக் கொள்வனவுக்குப் பயன்படுத்தியிருந்தனர். அத்துடன், இலங்கைப் படையினரிடமிருந்தும் ஆயுதங்களைக் கைப்பற்றியுள்ளனர். செப்டெம்பர், அக்டோபரில் இலங்கை கடற்படை புலிகளின் விநியோகங்களை மூழ்கடித்தது.
மோதலில் சம்பந்தப்பட்ட சகல தரப்பினர் மீதும் ஆட்கடத்தல், நீதிவிசாரணைக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பாக மனித உரிமைக் குழுக்களுக்கும் ஏனைய அவதானிகளும் குற்றச்சாட்டு தெரிவித்திருக்கின்றனர்.
சிறுவர்களை பலவந்தமாக சேர்த்துக் கொள்வது தொடர்பாக புலிகள் மற்றும் கருணா அணிமீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக விடுதலைப் புலிகள் அமெரிக்காவின் பிரஜைகளையோ, சொத்துகளையோ தாக்கியதில்லை. இலங்கைப் படையினர், அரசியல் வாதிகள், பொதுமக்கள், வர்த்தகத்துறையுடன் தமது தாக்குதல்களை அவர்கள் மட்டுப்படுத்தியுள்ளனர். ஆயினும் அமெரிக்க தூதுவர் பயணம் செய்த ஹெலிகொப்டர் பெப்ரவரியில் மோட்டார் தாக்குதலுக்கு இலக்கானது. புலிகள் இச்சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கோரியிருந்தனர்.
பயங்கரவாதக் குழுக்களுக்கு உதவுவோர் தொடர்பாக இலங்கையினது சமஷ்டி விசாரணைப் பிரிவுக்கு வழங்கிய ஒத்துழைப்பால் ஆட்களை கைது செய்ய முடிந்தது. இலங்கை அரசின் சம்பந்தப்பட்ட முகவரமைப்புகளுக்கு அமெரிக்கா பயிற்சி வழங்கியுள்ளது. கொள்கலன் பாதுகாப்பு முன்முயற்சி மற்றும் கொழும்புத்துறைமுகத்தில் மெகா துறைமுக செயல் திட்டம் என்பனவற்றை அமெரிக்கா அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு அளித்துள்ளது.