களத்தில் ஹர்பஜன் மீண்டும் மோசமாக நடந்து கொண்டால் வாழ்நாள் தடை விதிக்கப்படுமென ஐ.பி.எல்.நிர்வாகக் குழு உறுப்பினர் ஐ.எஸ்.பிந்த்ரா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மொகாலியில் நடந்த ஐ.பி.எல்.லீக் போட்டியில் ஷ்ரீசாந்த் கன்னத்தில் ஹர்பஜன் அறைந்தார். இது விசாரணையில் உறுதி செய்யப்பட, 11 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டார். இந்நிலையில், ஐ.பி.எல்.நிர்வாகக் குழு உறுப்பினர் ஐ.எஸ். பிந்த்ரா கூறுகையில்;
`ஹர்பஜன் தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையைப் பார்த்துத் திருந்திக்கொள்ள வேண்டும். அவுஸ்திரேலிய தொடரின் போதே எச்சரிக்கப்பட்டார். நான் அவருக்குத் தனிப்பட்ட முறையில் ஆலோசனை கூறினேன். ஆனால், அவர் திருந்துவதாகத் தெரியவில்லை. அவரது செய்கைகள் எங்களுக்கு வருத்தத்தையளிக்கிறது.
இப்போது விதிக்கப்பட்ட தடையுடன் முடிந்து விடவில்லை. இந்தியன் கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ) தனது விசாரணையை தொடங்கியுள்ளது. மீண்டும் ஒரு முறை ஹர்பஜன் இது போன்ற செயலில் ஈடுபட்டால் வாழ்நாள் தடையைச் சந்திக்கநேரிடும். பொதுவாகவே வீரர்கள் உட்பட அனைவரும் இந்தியன் கிரிக்கெட் சபை கருணை உள்ளம் கொண்டது என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஹர்பஜன் விடயத்தில் இது பொய்யாகிவிட்டது.
அவுஸ்திரேலியாவில் நடந்த சம்பவத்துடன் இதனை ஒப்பிடக்கூடாது. அந்த விடயத்தில் ஹர்பஜன் குற்றமற்றவர். ஆதலால், இந்திய கிரிக்கெட் சபை முழுமையாக ஆதரவு தெரிவித்தது . தற்போதைய பிரச்சினையில் குற்றம் செய்துள்ளதால் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.